டெல்லி வசந்த் கஞ்ச் பகுதியில் பிரபல ஆசிரமம் ஒன்று செயல்பட்டு வருகிறது. சுவாமி சைதன்யானந்த சரஸ்வதி என்ற பார்த்தசாரதி என்பவர் இதன் இயக்குநராக உள்ளார். இந்த ஆசிரமத்திற்கு உட்பட்டு, ஸ்ரீ சாரதா இந்திய மேலாண் மையம் என்ற பெயரில் செயல்பட்டு வரும் கல்வி நிறுவனத்தில் பொருளாதார ரீதியாக பின்தங்கிய மாணவிகள் ஸ்காலர்ஷிப் பெற்று படித்து வருகின்றனர். அவர்களில், முதுநிலை நிர்வாகத்திற்கான டிப்ளமோ படித்து வரும் 15-க்கும் மேற்பட்ட மாணவிகள் சாமியார் பார்த்தசாரதிக்கு எதிராக ஆபாச பேச்சுகள், ஆபாச குறுஞ்செய்திகளை அனுப்புதல் மற்றும் உடல்ரீதியாக கட்டாயப்படுத்தி தொடர்பு கொள்ளுதல் போன்றவற்றில் ஈடுபட்டார் என அடுக்கடுக்காக குற்றச்சாட்டுகளை சுமத்தி உள்ளனர். சாமியாரின் வற்புறுத்தலுக்கு ஏற்ப நடந்து கொள்ளும்படி பெண் பணியாளர்கள் மற்றும் நிர்வாகத்தினரும் கூட மாணவிகளுக்கு அழுத்தம் கொடுத்துள்ளனர். அவர்களின் ஏழ்மையை பயன்படுத்தி பாலியல் துன்புறுத்தல் நடந்துள்ளது என கூறப்படுகிறது.
ஆசிரம வார்டன்கள் சிலர், மாணவிகளை சாமியாரிடம் அறிமுகப்படுத்தி வைத்தனர். அவர்கள் அளித்த வாக்குமூலம் அடிப்படையில், சாமியாருக்கு எதிராக பாலியல் துன்புறுத்தல் உள்பட பிற வழக்குகளை போலீசார் பதிவு செய்தனர். இதனை டெல்லி தென்மேற்கு மாவட்ட காவல் துணை ஆணையாளர் அமித் கோயல் கூறியுள்ளார். சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாக கொண்டு போலீசார் விசாரித்து வருகின்றனர். அவரை கைது செய்ய போலீசார் அடங்கிய தனிப்படைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனையடுத்து அவரை பதவியில் இருந்து நீக்கி ஆசிரம நிர்வாகம் முடிவு எடுத்து உள்ளது.

