நெல்லை மாவட்டம் திடியூரில் தனியார் பொறியியல் கல்லூரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கல்லூரியில் ஏராளமான மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். இந் நிலையில், நேற்று கல்லூரியில் சில மாணவர்களுக்கு உடல்நிலை பாதிக்கப்பட்டது. உடனடியாக கல்லூரி மாணவர்கள் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அவர்களுக்கு பரிசோதனை செய்ததில் எலிக்காய்ச்சலுக்கான அறிகுறி இருந்தது கண்டறியப்பட்டது. இதனையடுத்து அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொடர்ந்து கல்லூரியின் விடுதி வளாகத்தில் நேற்று சுகாதாரத்துறையினர் சோதனை செய்தனர். சோதனையில் சுகாதாரமில்லாத தண்ணீர் பயன்பாட்டால் மாணவர்கள் பாதிக்கப்பட்டது தெரியவந்தது. உணவு பாதுகாப்புத்துறையினர் விடுதி உணவகத்தில் ஆய்வு செய்ததில் குறைபாடுகள் கண்டறியப்பட்டது.மேலும் கல்லூரி வளாகத்தில் உள்ள 2 உணவகங்களின் உரிமம் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டுள்ளது. கல்லூரி வளாகம் முழுவதையும் புதுப்பித்தல் உள்ளிட்ட மறு உத்தரவுகள் வரும் வரை கல்லூரியை மூட சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. கல்லூரியின் கேன்டீன்களை மூடவும் உத்தரவிட்டுள்ளது.