Skip to content

தள்ளுவண்டி கடைகளுக்கு எஃப்.எஸ்.எஸ்.ஏ.ஐ சான்றிதழ் கட்டாயம்

தமிழ்நாட்டில் பொது இடங்களில் தள்ளுவண்டியில் வைத்து உணவுப் பொருட்களை விற்பனை செய்யும் அனைத்து வகையான கடைகளுக்கும் FSSAI சான்றிதழ் கட்டாயம் என தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை அறிவித்துள்ளது.

மக்களின் ஆரோக்கியம் மற்றும் உணவுத் தரத்தைப் பாதுகாப்பதை உறுதி செய்வதற்கான முக்கிய நடவடிக்கையாக இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. பானிபூரி, வடை, சூப், சிக்கன் பக்கோடா உள்ளிட்ட சிற்றுண்டிகளை விற்பனை செய்யும் தள்ளுவண்டிக் கடை உரிமையாளர்கள் அனைவரும் முறையான உரிமத்தைப் பெற வேண்டும் என்று உணவுப் பாதுகாப்புத் துறை உத்தரவிட்டுள்ளது.

FSSAI உரிமம் இல்லாத கடைகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்றும் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை சார்பில் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்த உரிமத்தைப் பெறுவதற்கான செயல்முறை எளிதாக்கப்பட்டுள்ளது. தள்ளுவண்டிக் கடை விற்பனையாளர்கள் ஆன்லைன் மற்றும் இ-சேவை மையங்கள் மூலம் இலவசமாகவே உரிமத்தைப் பெற்றுக் கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகள், உரிமம் பெறுவதற்கான வழிமுறைகளை விற்பனையாளர்களுக்கு எடுத்துரைக்க வேண்டும் என்றும், தள்ளுவண்டிக் கடை விற்பனையாளர்கள் உரிமம் பெற்றுள்ளார்களா என்பதைக் கண்காணித்து உறுதி செய்ய வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.

error: Content is protected !!