சிவகங்கை மாவட்டம், காரைக்குடி அண்ணாநகர் பகுதியில் இன்று அதிகாலை மீன் ஏற்றிச் சென்ற சரக்கு வாகனம் ஒன்று சென்றுகொண்டிருந்தது. அப்போது ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த வாகனம், சாலையோரம் இருந்த உயர் அழுத்த மின்கம்பங்கள் மீது பயங்கரமாக மோதியது. இந்த மோதலில் அடுத்தடுத்து இரண்டு மின்கம்பங்கள் முறிந்து வாகனம் மீதே சரிந்து விழுந்தன.
விபத்தின் போது மின்கம்பிகளில் இருந்து மின்வயர்கள் அறுந்து சாலை முழுவதும் சிதறி விழுந்தன. அதிகாலை நேரம் என்பதால் அப்பகுதியில் மக்கள் நடமாட்டம் குறைவாக இருந்தது. இதன் காரணமாகப் பெரும் உயிர்ச்சேதம் தவிர்க்கப்பட்டது.
தகவல் அறிந்த மின்வாரிய ஊழியர்கள் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மின் இணைப்பைத் துண்டித்தனர். சுமார் 5 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு மின்கம்பங்கள் சரி செய்யப்பட்டு, மின் விநியோகம் சீரமைக்கப்பட்டது. இந்த விபத்தால் அண்ணாநகர் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நீண்ட நேரம் மின்சாரம் இல்லாததால் பொதுமக்கள் பெரும் அவதிக்குள்ளாகினர்.

