தமிழகம்-மேற்கு வங்காளம் இடையே 3 அம்ரித் பாரத் ரெயில் சேவை சமீபத்தில் தொடங்கி வைக்கப்பட்டது. அதன்படி, தாம்பரம்-சந்திரகாச்சி, திருச்சி-நியூ நியூஜல்பைகுரி, நாகர்கோவில்-நியூஜல்பைகுரி ஆகிய அம்ரித் பாரத் ரெயில்கள் சேவை தொடங்கி உள்ளது.
அந்த வகையில் நியூஜல்பைகுரி – திருச்சி அம்ரித் பாரத் ரெயிலின் முதல் சேவை திருச்சியில் இருந்து இன்று (புதன்கிழமை) காலை தொடங்கியது. மறுமார்க்கத்தில் நியூ ஜல்பைகுரியில் இருந்து வரும் 30-ந்தேதி முதல் சேவை துவங்க உள்ளது.
அதன்படி திருச்சியில் இருந்து இன்று காலை புறப்பட்ட அம்ரித் பாரத் விரைவு ரெயில் (வண்டி எண் .20610) காலை 7.20 மணிக்கு தஞ்சாவூர் வந்தது. இந்த ரெயிலுக்கு காவிரி டெல்டா ரெயில்வே உபயோகிப்பாளர் சங்கம் சார்பில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. சங்க செயலாளர் வக்கீல் ஜீவக்குமார் தலைமையில் துணை தலைவர்கள் பன்னீர்செல்வம், ராம.சந்திரசேகரன், கண்ணன் ஆகியோர் முன்னிலையில் பொருளாளர் திருமேனி, துணை செயலாளர் உமர்முக்தர், புரவலர் தென்னை விஞ்ஞானி செல்வம், நிர்வாகி ஜெயக்குமார் ஆகியோர் அம்ரித் பாரத் ரெயிலுக்கு வரவேற்பு அளித்தனர். ரெயிலை ஓட்டிவந்த டிரைவர் , தஞ்சை ரெயில்வே நிலைய மேலாளர் முருகானந்தம் ஆகியோருக்கு சால்வை அணிவித்து கவுரவித்தனர். பின்னர் அந்த ரெயிலில் பயணித்த பயணிகள், நடைமமையில் இருந்த பயணிகள் உள்ளிட்ட அனைவருக்கும் இனிப்புகள் வழங்கினர்.
இந்த புதிய அம்ரித் பாரத் ரெயில் திருச்சியில் இருந்து புதன்கிழமை தோறும் காலை 5.45 மணிக்கு புறப்பட்டு தஞ்சாவூர், கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம், திருப்பாதிரிப்புலியூர், விழுப்பும், செங்கல்பட்டு, தாம்பரம், சென்னை எழும்பூர், கூடூர், விஜயவாடா, புவனேஸ்வர், கட்டாக், பாலசோர், ராஜாமுந்திரி வழியாக நியூ ஜல்பாய்குரிக்கு 3-வது நாள் அதாவது வெள்ளிக்கிழமை காலை 5 மணிக்கு சென்றடையும்.
மறுமார்க்கமாக, நியூ ஜல்பாய்குரியில் இருந்து வெள்ளிக்கிழமை தோறும் மாலை 4.15 மணிக்கு புறப்பட்டு (வண்டி எண் 20609) 3-வது நாள் மாலை அதாவது ஞாயிற்றுகிழமை மாலை 4.15 மணிக்கு திருச்சி சென்றடையும்.

