மதுரையில் அதிமுக மாஜி அமைச்சர் செல்லூர் ராஜூ, நிருபர்களிடம் கூறியதாவது:
மக்களுக்கான ஒரு ஆளாக இருப்பதால் எனக்கு ஓட்டு போடுகிறார்கள். இல்லாவிட்டால், மக்கள் போயிட்டு வாங்கனு சொல்லிருவாங்க. நான் தொகுதி மாறுகிறேனா, மாறவில்லையா என்பதை எங்களது பொதுச்செயலாளர் எடப்பாடியிடம் தான் கேட்க வேண்டும். என்னைத் தோற்கடிக்க வேண்டும் என நினைப்பது வாஸ்தவம் தான். அதை நான் பெரிதாக எடுத்துக் கொள்ள மாட்டேன்.
நயினார் நாகேந்திரன், திரிஷா குறித்து பேசியது தொடர்பாக அவரே முற்றுப்புள்ளி வைத்து விட்டார். அதிமுக-திமுகவுக்கும் தான் போட்டி, மற்றவர்களைப் பற்றி எனக்குத் தெரியாது. புதிய கட்சிகள் மட்டுமின்றி எந்த கட்சி வந்தாலும் ஏற்றுக்கொள்வோம் என எடப்பாடி சொல்லியிருக்கிறார். இனி என்னிடம் கேள்வி கேட்கும்போது, திமுக-அதிமுக பற்றி கேளுங்கள். மற்றபடி எதையாவது கேட்டு, அதை ட்ரெண்டாக்கி விடுகிறீர்கள். இவ்வாறு அவர் கூறினார்.

