சத்தீஷ்கார், மராட்டியம், ஜார்க்கண்ட், ஒடிசா, மத்தியபிரதேசம் உள்பட பல்வேறு மாநிலங்களில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகள் ஆதிக்கம் உள்ளது.
நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை ஒடுக்கும் நடவடிக்கையில் மாநில சிறப்பு போலீஸ் படையுடன், மத்திய பாதுகாப்புப்படையினர் ஈடுபட்டு வருகின்றனர். வரும் 31ம் தேதிக்குள் நாட்டில் நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளை முழுவதும் ஒழிக்க மத்திய அரசு காலக்கெடு நிர்ணயித்துள்ளது. இதன் காரணமாக நக்சலைட்டுகள், மாவோயிஸ்டுகளுக்கு எதிராக பாதுகாப்புப்படையினர் அதிரடி நடவடிக்கைகளை எடுத்து வருகின்றனர்.
இந்த நடவடிக்கையால் பல நக்சலைட்டுகள் ஆயுதங்களை கைவிட்டு சரணடைந்து வருகின்றனர். சரணடையும் நக்சலைட்டுகளுக்கு அரசு மறுவாழ்வு திட்டங்களை அமல்படுத்தி வருகிறது.
இந்நிலையில், ஒடிசா மாநிலம் களஹாண்டி மாவட்ட போலீஸ் தலைமையகத்தில் இன்று 11 நக்சலைட்டுகள் தங்களை கைவிட்டு சரணடைந்தனர். சரணடைந்த நக்சலைட்டுகளில் சிலர் மராட்டியம் உள்பட வேறு மாநிலங்களை சேர்ந்தவர்கள் ஆவர்.
சரணடைந்த 11 நக்சலைட்டுகளின் தலைக்கு மொத்தம் 63 லட்ச ரூபாய் சன்மானம் அறிவிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த நக்சலைட்டுகள் சரணடைந்த நிலையில் அவர்களின் மறுவாழ்வு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

