நீலகிரி பாராளுமன்ற தொகுதியில் தி.மு.க., சார்பில் எம்.பி., ராஜா மீண்டும் போட்டியிடுகிறார். கடந்த 25ம் தேதி ஊட்டியில் இருந்து கோத்தகிரி வழியாக மேட்டுப்பாளையத்திற்கு வேட்பாளர் ராஜா சென்றுள்ளார். அவருடன் சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் மற்றும் தி.மு.க., மாவட்டச் செயலர் முபாரக் ஆகியோரும் காரில் சென்றுள்ளனர். அப்போது கோத்தகிரி – மேட்டுப்பாளையம் சாலையில் குஞ்சப்பனை சோதனைச் சாவடி அருகே தேர்தல் பறக்கும் அலுவலர் கீதா தலைமையில் போலீசார் ராஜா சென்ற வாகனத்தை தடுத்து நிறுத்தினர். காரில் ராஜா மற்றும் அமைச்சர் ஆகியோர் இருப்பதை பார்த்த அவர்கள் சாதாரணமாக சோதனையிட்டுள்ளனர். பின்னர் ராஜா உள்ளிட்டோர் மேட்டுப்பாளையும் சென்று விட்டனர்.
இந்நிலையில் ‘ராஜா சென்ற வாகனத்தில் பல பெட்டிகள் இருந்த நிலையில் அவற்றை முழுமையாக சோதனையிடாமல் சில நிமிடங்களில் தேர்தல் அலுவலர்கள் சோதனை பணியை நிறைவு செய்து அனுப்பி விட்டதாக புகார் எழுந்தது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என மாநில தேர்தல் ஆணையம் வரை புகார் சென்றுள்ளது. இந்த தகவல் சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. இது தொடர்பாக கலெக்டர் தலைமையில் விசாரணை நடந்தது. இந்நிலையில், காரை முறையாக சோதனையிடவில்லை எனக்கூறி, தேர்தல் அலுவலர் கீதாவை சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
