கர்நாடகாவின் பெங்களூரு நகரில் புகழ் பெற்ற கப்பன் பார்க் என்ற பெயரில் பூங்கா ஒன்று உள்ளது. காதலர் தின கொண்டாட்டத்தின்போது, நிறைய ஜோடிகள் இந்த பூங்காவுக்கு வந்து சென்றனர். அன்பையும், மகிழ்ச்சியையும் பரிமாறி கொண்டனர்.
காதலர்கள் அன்பை பகிர்ந்து கொள்ளும் பகுதியாக இந்த பூங்கா உள்ளது. இருந்தபோதும், மற்றவர்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் வகையில், சில விசயங்களை செய்ய தடை விதிக்கப்பட்டு உள்ளது.
இந்த பூங்காவுக்கு சமூக ஊடக பயன்பாட்டாளரான கியாதி ஸ்ரீ என்பவர் கணவர் ஷாபாஸ் அன்சார் என்பவருடன் சென்றுள்ளார். அவர்கள் இருவரும் பேசியபடி நடந்து சென்றனர். அப்போது, பொது இடத்தில் அன்பை பகிர தடை விதிக்கப்பட்ட அடையாளத்துடன் கூடிய பலகை ஒன்று வைக்கப்பட்டு இருந்தது.
அந்த பகுதிக்கு வந்து, அதனை அவர்கள் இருவரும் கவனித்தனர். ஜோடி ஒன்று சாய்வு பலகையில் அமர்ந்து இருப்பது போன்றும், ஆனால் முத்தம் கொடுப்பதற்கு தடை என்றும் அந்த பலகை குறிப்பிட்டு இருந்தது. இதனை மீறினால் அபராதம் விதிக்கப்படும் என்றும் அந்த பலகையில் எச்சரிக்கை அறிவிப்பு இருந்தது.
ஆனால், அதனை கவனத்தில் கொள்ளாமல் அலட்சியத்துடன் அவர்கள் செயல்பட்டு உள்ளனர். பலகையின் முன்பே, கணவரும், மனைவியும் முத்தம் கொடுத்து, அதனை படம் பிடித்ததுடன், ஆன்லைனிலும் பகிர்ந்து உள்ளனர். இந்த வீடியோ வைரலான நிலையில், நெட்டிசன்கள் பலரும் கடுமையாக கண்டனம் தெரிவித்து உள்ளனர். அந்த பலகை பல ஆண்டுகளாக உள்ளது என்றும் அத்துமீறி செயல்படுவது தவறு என்றும் சிலர் தெரிவித்தனர்.

