மருதமலை பஸ் ஸ்டாண்டில் ஒகோவை மருதமலை முருகன் கோவில் பேருந்து நிலையத்திற்குள் நள்ளிரவில் புகுந்த ஒற்றைக் காட்டு யானையால் கடை வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள் அலறி அடித்து ஓடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முருகனின் ஏழாம் படை வீடாகப் போற்றப்படும் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவில் அடிவாரப் பகுதியில், நேற்று நள்ளிரவு உணவு தேடி மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதியிலிருந்து ஒற்றைக் காட்டு யானை கீழே இறங்கியது. அந்த யானை எதிர்பாராத விதமாக மருதமலை பேருந்து நிலையத்திற்குள் கம்பீரமாக நுழைந்தது.
அப்போது அங்கிருந்த கடைகளில் இருந்த வியாபாரிகள் மற்றும் பொதுமக்கள், யானையைக் கண்டு நிலைகுலைந்து போனார்கள். யானை பிளிறும் சத்தத்தைக் கேட்டு அதிர்ச்சியடைந்த அவர்கள், பாதுகாப்பான இடங்களை நோக்கி அலறி அடித்துக்கொண்டு ஓட்டம் பிடித்தனர். யானையை விரட்ட பொதுமக்கள் பெரும் கூச்சலிட்டதால் அந்த இடமே போர்க்களம் போலக் காட்சியளித்தது.
தகவல் கிடைத்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த வனத்துறையினர் மற்றும் வேட்டை தடுப்பு காவலர்கள், தங்களது வாகனங்களில் இருந்த சைரன் (Siren) ஒலியை எழுப்பி யானையை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். சுமார் அரை மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு, அந்த ஒற்றை யானை மீண்டும் வனப்பகுதிக்குள் விரட்டப்பட்டது.
மருதமலை பஸ் ஸ்டாண்டிற்குள் யானை புகுந்தபோது அங்கிருந்தவர்கள் எடுத்த செல்போன் வீடியோ காட்சிகள் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. மருதமலைப் பகுதியில் சமீபகாலமாக வனவிலங்குகளின் ஊடுருவல் அதிகரித்து வருவதால், பக்தர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய வனத்துறை நிரந்தர நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

