தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், சென்னை, சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பொது நூலக இயக்ககம் சார்பில் அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகத்தினை காணொளிக்காட்சி வாயிலாக இன்று (10.06.2025) திறந்து வைத்தார்.
அதனைத்தொடர்ந்து மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி குத்து விளக்கேற்றி வைத்து, சிறப்பு நூலகத்தினை பார்வையிட்டார்.
தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் சென்னை, சென்ட்ரல் மெட்ரோ இரயில் நிலையத்தில் பள்ளிக் கல்வித் துறை சார்பில் ரூ.1.85 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டுள்ள சென்னை புத்தகப் பூங்கா, பொது நூலக இயக்ககம் சார்பில் ரூ.29.80 கோடி மதிப்பீட்டில் அனைத்து மாவட்டங்களிலும் கட்டப்பட்டுள்ள 110 கூடுதல் நூலகக் கட்டடங்கள், முழுநேர கிளை நூலகக் கட்டடம் மற்றும் 70 சிறப்பு நூலகங்களை திறந்து வைத்தார். அதன்படி அரியலூர் மாவட்டம், அரியலூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் பொதுமக்கள், சிகிச்சை பெறும் நோயாளிகள் மற்றும் புற நோயாளிகளின் உறவினர்கள் ஆகியோர் பயன்பெறும் வகையில் பொது நூலக இயக்ககம் சார்பில் அமைக்கப்பட்டுள்ள சிறப்பு நூலகத்தினை தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் காணொளிக் காட்சி வாயிலாக திறந்து வைத்துள்ளார்கள். இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி கலந்துகொண்டு சிறப்பு நூலகத்தில் குத்து விளக்கேற்றி வைத்தார். மேலும். இச்சிறப்பு நூலகத்திற்கு பொதுமக்கள் நன்கொடையாக வழங்கிய புத்தகங்களையும் பெற்றுக்கொண்டார்.
இந்நிகழ்வில், அரியலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனை முதல்வர் மரு.முத்துகிருஷ்ணன், மாவட்ட நூலக அலுவலர் வேல்முருகன், அரியலூர் வருவாய் கோட்டாட்சியர் கோவிந்தராஜ், நிலைய மருத்துவ அலுவலர் மரு.கொளஞ்சிநாதன், அரியலூர் வட்டாட்சியர் முத்துலெட்சுமி மற்றும் இதர அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.