தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினம் பழஞ்செட்டி தெருவை சேர்ந்த நைனா முகமது மகன் நபில்,22, இவர் ஜவுளிக்கடை வைத்துள்ளார். இவர் தனது நண்பர்களான அதிராம்பட்டினம் நடுத்தெருவை சேர்ந்த ரபீக் அகமது மகன் அப்துல் ரஷீத், 22, செய்யது மீராசா மகன் சித்திக் முகமது,22, பிலால் நகரை சேர்ந்த ஜபருல்லா மகன் இம்ரான்,22, ஏரிப்புறக்கரை பகுதியை சேர்ந்த ராஜாமுகமது மகன் அப்துல் ரபீக்,22, ஆகியோருடன், ராஜாமடம் பகுதியில் அக்னியாறு என்ற கட்டாற்றில் குளிக்க சென்றுள்ளார்.
இதில், நபில் ஆற்றின் நடுவே குளிக்க சென்ற போது, அங்கிருந்ந பள்ளத்தில் மூழ்கினார். சக நண்பர்கள் நபிலை தேடியும் கிடைக்க வில்லை. உடனே அதிராம்பட்டினம், போலீசாருக்கு தகவல் அளித்தனர். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மற்றும் பட்டுக்கோட்டை தீயணைப்பு நிலைய அலுவலர் செல்வம் தலைமையிலான தீயணைப்பு வீரர்கள், ஆற்றில் மூழ்கிய நபிலை தேடினர். தொடர்ந்து, இரண்டு மணி போராட்டத்திற்கு, பிறகு நபிலின் உடல் சடலமாக மீட்கப்பட்டது. அதிராம்பட்டினம் அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனைக்காக கொண்டு செல்லப்பட்டு, போலீசார் விசாரித்து வருகின்றனர். இளைஞர் ஆற்றில் மூழ்கிய சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.