நடிகர் மோகன் லால் மற்றும் ஷோபனா நடிப்பில் பெரிதாக எந்த புரொமோஷனும் இல்லாமல் கடந்த மாதம் 25ஆம் தேதி வெளியான மலையாள படம் ‘துடரும்’. இருவரும் 15 வருடங்களுக்கு பிறகு மீண்டும் இணைந்து நடித்துள்ளனர். இப்படத்தை தருண் மூர்த்தி இயக்கியிருக்க ரெஞ்சித் தயாரித்துள்ளார். மோகன்லாலின் 360வது படமாக உருவாகியுள்ள இப்படத்திற்கு ஜேக்ஸ் பிஜாய் இசையமைத்துள்ளார்.
இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. மேலும் வசூல் ரீதியாகவும் உலகளவில் இதுவரை ரூ.200 கோடிக்கு மேல் வசூலித்துள்ளதாக கூறப்படுகிறது. இதுவரை வெளியான மலையாள திரைப்படங்களில் கேரளாவில் மட்டும் அதிகம் வசூலித்த படமாக இருப்பதாகப் படக்குழு தெரிவித்துள்ளது. படத்தின் வரவேற்பு குறித்து கடந்த மாத இறுதியில் மோகன்லால் நெகிழ்ச்சியுடன் தனது சமூக வலைதளப் பக்கம் மூலம் நன்றி தெரிவித்திருந்தார்.
இப்படக்குழுவினரை சூர்யா மற்றும் கார்த்தி இருவரும் நேரில் பாராட்டியிருந்தனர். இந்த நிலையில் மோகன்லால் தமிழ்நாட்டில் உள்ள திருமலை முருகன் கோயிலில் தரிசனம் மேற்கொண்டதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்போது அவர் தங்க வேலை காணிக்கையாக வழங்கியதாக கூறப்படுகிறது. படத்தில் இடம்பெற்றிருந்த ‘கொண்டாட்டம்’ என்ற பாடலில் திருமலை முருகன் குறித்த வரிகள் எழுதப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது