Skip to content

வட மாநிலத்தவருக்கு வேலையில் முன்னுரிமை…….அதிராம்பட்டினம் தொழிலாளர்கள் சாலை மறியல்

தமிழகம் முழுவதும் வடமாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளர்கள் கட்டுமானம், தொழில் நிறுவனங்களில் அதிகளவில் பணியாற்றி வருகின்றனர். குறிப்பாக, டெல்டா மாவட்டங்களில் கட்டுமான பணிகளை தாண்டி விவசாய பணிகளிலும் அதிகளவில் வேலை பார்த்து வருகின்றனர். இதனால், தமிழக தொழிலாளர்களுக்கு வேலை பறிபோவதாகக் கூறி, அவ்வப்போது போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில்,  இன்று தஞ்சாவூர் மாவட்டம் அதிராம்பட்டினத்தில், வட மாநில தொழிலாளர்களுக்கு, அனைத்து கட்டிட வேலைகளுக்கும் முன்னுரிமை அளிக்கப்படுவதால், தமிழக கட்டிடத் தொழிலாளர்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, நுாற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட கட்டிடத் தொழிலாளிகள், சேர்மன்வாடி பகுதியில் திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர்.  மறியலில் ஈடுபட்டவர்களில் பெரும்பாலானவர்கள் பெண்கள்.

இது குறித்து தகவலறிந்த அதிராம்பட்டினம் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரவிசக்கரவர்த்தி மறியலில் ஈடுபட்ட தொழிலாளிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி, சமாதானம் செய்தார். இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கலைந்து சென்றனர். இதனால் அதிராம்பட்டினம்– பட்டுக்கோட்டை சாலையில் சுமார் ஒரு மணி நேரம் போக்குவரத்துபாதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!