கடந்த 5ம் தேதி ஆடுதுறை பேரூராட்சி அலுவலகத்தில் நாட்டு வெடிகுண்டு வீசி பேரூராட்சி தலைவர் ம.க ஸ்டாலினை ஒரு கும்பல் தாக்கியது . இதில் அதிர்ஷ்டவசமாக ம.க ஸ்டாலின் உயிர் தப்பினார். இந்த சம்பவத்தில் ஈடுபட்ட குற்றவாளிகளை பிடிக்க ஆறு தனிப்படைகள் அமைக்கப்பட்டு குற்றவாளிகள் தேடப்பட்டு வரும் நிலையில் , இன்று மாலை கும்பகோணம் அருகே உடையாளூர் புது தெருவை சேர்ந்த லட்சுமணன் என்பவர் நாட்டு வெடிகுண்டு தயாரித்தவர் என காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது .
இதனை தொடர்ந்து இன்று மாலை காவல்துறையினர் லட்சுமமனனை பிடிக்க சென்றபோது லட்சுமணன் ஊரில் இல்லை.
எனவே அவரது மனைவி மதனா வை காவல்துறையினர் விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்து வந்தனர்.
இந்த தகவல் வேளாங்கண்ணி சென்று திரும்பிய லட்சுமணனுக்கு தெரிய வரவே , தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். லட்சுமணன் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தெரிய வந்ததும், உடனடியாக அங்கு விரைந்து சென்ற காவல் துறையினர் லட்சுமணனின் சடலத்தை கைப்பற்றி உடற்கூறு ஆய்வுக்காக கும்பகோணம் அரசு பொது மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வெடிகுண்டு வீசிய சம்பவத்தில் சேலத்தில் மருதுபாண்டி என்பவர் இன்று கைது செய்யப்பட்ட நிலையில், லட்சுமணன் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் இந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.