குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் உள்ள சர்தார் வல்லபபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து நேற்று பிற்பகல் 1.38 மணிக்கு ஏர் இந்தியா விமானம் லண்டனுக்கு புறப்பட்டது. இதில் 2 விமானிகள், 10 விமான ஊழியர்கள், 230 பயணிகள் என 242 பேர் பயணம் செய்தனர்.

விபத்து குறித்து அகமதாபாத் விமான நிலைய வட்டாரங்கள் கூறியதாவது: விமான நிலையத்தின் ஓடுபாதையில் ஏர் இந்தியா விமானம் சரியான வேகத்தில்தான் இயக்கப்பட்டுள்ளது. ஆனால், தரையைவிட்டு பறக்க தொடங்கிய பிறகு,போதுமான உயரத்துக்கு மேலே எழும்பவில்லை. அடுத்த 2 நிமிடங்களில் விமானம் கீழே விழுந்து நொறுங்கியுள்ளது. கீழே விழுந்த வேகத்தில் பயங்கரமாக தீப்பிடித்து எரிந்தது.லேண்டிங் கியர் கோளாறு காரணமாக விமான சக்கரம் ஏதாவது கட்டிடம் மீது மோதியிருக்கலாம். விமான இன்ஜினில் பறவைகள் மோதியிருக்கலாம். விமான இன்ஜினில் திடீரென கோளாறு ஏற்பட்டிருக்கலாம். இதுபோன்ற காரணங்களால் விபத்து நேரிட்டிருக்க வாய்ப்பு உள்ளது. விமானத்தின் கறுப்பு பெட்டி மீட்கப்பட்டுள்ளது. அதை ஆய்வு செய்ய வேண்டும். விபத்து குறித்து முழுமையாக விசாரணை நடத்த வேண்டும். அதன் பிறகே, விபத்துக்கான உண்மையான காரணம் தெரியவரும். இவ்வாறு அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
அகமதாபாத் போலீஸார் கூறியதாவது: லண்டன் செல்லும் விமானம் என்பதால் எரிபொருள் முழுமையாக நிரப்பப்பட்டு இருந்தது. சுமார் 1.25 லட்சம் லிட்டர் பெட்ரோல் நிரப்பப்பட்டதாக கூறப்படுகிறது. விமானம் புறப்பட்ட 2 நிமிடங்களில், அருகே உள்ள மருத்துவ கல்லூரி விடுதி மீது மோதியுள்ளது. இதில், விமானம் வெடித்து சிதறி, சுற்றுவட்டார பகுதி முழுவதும் தீப்பிடித்து எரிந்தது. உடனடியாக 40 தீயணைப்பு வாகனங்களில் வீரர்கள் விரைந்து வந்து தீயணைக்கும் பணியில் ஈடுபட்டனர். பல மணி நேரம் தீவிரமாக போராடி தீ அணைக்கப்பட்டது. உடல்கள் மிகவும் கருகிய நிலையில் உள்ளதால் அடையாளம் காண முடியவில்லை. ஏராளமான பயணிகளின் தலை, உடல் பாகங்கள் தனித்தனியாக மீட்கப்பட்டுள்ளன. டிஎன்ஏ சோதனைக்கு பிறகு, குடும்பத்தினரிடம் உடல்கள் ஒப்படைக்கப்படும்.
விமான விபத்தில் விஷ்வாஸ் குமார் ரமேஷ் (40) என்ற ஒரே ஒரு பயணி மட்டும் அதிர்ஷ்டவசமாக உயிர் பிழைத்துள்ளார். சற்று பதற்றமான நிலையில் இருந்தாலும், அவா் நம்ம ஊர் ஸ்கூட்டி விபத்தில் சிக்கியவர் போல மிக சாதாரணமாக நடந்து சென்றார். காலில் லேசாக அடிபட்டிருந்ததால், சற்று தாங்கி தாங்கி நடந்தார்.
அவர் டையூவை சேர்ந்தவர், (டாமன் டையூ யூனியன் பிரதேசம்) உயிர் தப்பிய ரமேஷ் 20 ஆண்டுகளாக லண்டனில் வசிக்கிறார். இங்கிலாந்து குடியுரிமை பெற்றவர். இவர் விமானத்தின் 11 ஏ இருக்கையில் பயணித்தார். அதே விமானத்தில் ரமேசின் அண்ணன் அஜய்குமாரும் பயணித்தார். ஆனால் அவர் உயிரிழந்து விட்டதுடன் உடலை அடையாளம் காணமுடியாமல் கருகி விட்டார்.
விபத்து குறித்தும், அதில் தான் தப்பியது குறித்தும் ரமேஷ் கூறியதாவது: நான் எப்படி பிழைத்தேன் என்று தெரியவில்லை. விமானத்திற்கு ஏதோ ஆகிவிட்டது என்பதை நான் உணர்ந்ததும்அவசரமாக கதவை திறந்து கீழே குதித்து விட்டேன். அப்போது விமானம் மிகவும் தாழ்வாகத்தான் பறந்து கொண்டிருந்தது. விமானம் புறப்பட்ட 23 வினாடிகளில் இந்த விபத்து ஏற்பட்டது. நான் கீழே விழுந்த உடன் மிகப்பெரிய சத்தம் கேட்டது. விமானம் விழுந்து தீப்பிடித்ததை பார்த்தேன். நான் விமானத்தின் அவசர கதவு அருகில் இருந்ததால் குதிக்க முடிந்தது.
உடலில் லேசான காயங்கள் தான் ஏற்பட்டது. ஆனால் அந்த சம்பவத்தை நினைத்தால் இப்போதும் அதிர்ச்சியாக இருக்கிறது. மீட்பு படை உதவியுடன் மருத்துவமனைக்கு வந்தேன்.
இவ்வாறு அவர் கூறினார்.