2026 சட்டமன்றத் தேர்தலில் பலம் வாய்ந்த 4 முனைப் போட்டி ஏற்பட்டிருப்பதாக அரசியல் நோக்கர்கள் கருதுகின்றனர். இந்த சூழலில் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நெருங்கிய தோழியாக இருந்த சசிகலா தொடங்கியுள்ள அரசியல் கட்சி மீது வெற்றிக்கான வாய்ப்பிருக்கிறதா? வாக்குகளை பிரிக்கும் யுக்தியா? போன்ற கேள்விகள் எழுகின்றன. கடந்த பிப்ரவரி மாத இறுதியில் ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் நடந்த ஜெயலலிதா பிறந்த நாள் பொதுக்கூட்டம் மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடைபெற்றது.
சசிகலா தொடங்கிய புதிய கட்சி
இதில் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா குறித்து பல்வேறு உருக்கமான விஷயங்களை பேசினார். பின்னர் கருப்பு, வெள்ளை, சிவப்பு நிறத்தில் நடுவில் அண்ணா, எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆகியோரின் படம் உள்ள கட்சி கொடியை அறிமுகப்படுத்தினார். கட்சியின் பெயரை விரைவில் அறிவிக்கப் போவதாகவும் தெரிவித்தார். இந்நிலையில் இன்று நண்பகல் தனது கட்சியின் பெயரை அறிவித்தார்…
அனைத்திந்திய புரட்சித் தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம் என்ற கட்சியின் பெயரை சென்னை போயஸ் கார்டனில் சசிகலா அறிவித்தார். தென்னந்தோப்பு சின்னம் எங்கள் கட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்தார். சாதித்தது யார் என்பதற்கு தேர்தல் முடிவுகள் பதில் சொல்லும் என்றார்.
பசும்பொன்னில் பேசும் போது, துரோகிகளின் வேரறுக்கும் கட்சியாக தன்னுடைய புதிய கட்சி இருக்கும் என்று சசிகலா தெரிவித்திருந்தார். சசிகலா சொல்

வது எடப்பாடி பழனிசாமியை தான் என்று பலரும் விமர்சிக்கின்றனர். ஏனெனில் தான் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறைக்கு செல்லும் முன்பு, அதிமுக எம்.எல்.ஏக்களை எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தருமாறு அறிவுறுத்தி முதலமைச்சர் நாற்காலியில் அமர வைத்து சென்றார்.
அதுமட்டுமின்றி கட்சியின் துணை பொதுச் செயலாளராக டிடிவி தினகரனை நியமித்தார். ஆனால் தற்போதைய சூழலை எடுத்துக் கொண்டால் சசிகலாவிற்கு எதிராக நின்று இருவரும் அரசியல் செய்து வருகின்றனர். அதுவும் தேசிய ஜனநாயக கூட்டணி என்ற ஒரே குடையின் கீழ் கைகோர்த்து 2026 சட்டமன்றத் தேர்தலை எதிர்கொள்ள தயாராகி கொண்டிருக்கின்றனர். இந்த விஷயங்கள் சசிகலாவிற்கு பெரிதும் கோபத்தை வரவழைத்துள்ளது.
தெற்கில் வெற்றியை தீர்மானிக்கும் முக்குலத்தோர்
எனவே பாஜகவின் நெருக்கடி, வழக்கு விசாரணைகள் உள்ளிட்ட பல விஷயங்களை ஓரங்கட்டி வைத்துவிட்டு தைரியமாக அரசியல் கட்சியை தொடங்கியிருப்பதாக கூறுகின்றனர். சசிகலாவை பொறுத்தவரை முக்குலத்தோர் சமூக செல்வாக்கு பெற்ற நபர். இந்த சமூகத்தை பிரதிபலிக்கும் தலைவர்களில் ஒருவர். எனவே தென் மாவட்டங்களில் கணிசமான வாக்கு வங்கியில் தாக்கத்தை ஏற்படுத்த முடியும் எனக் கருதுகிறார்.
சசிகலா – ராமதாஸ் சந்திப்பால் திருப்பம்
ஆனால் ஓ.பன்னீர்செல்வம் திமுகவிலும், டிடிவி தினகரன் என்.டி.ஏவிலும் என தனித்தனியே பிரிந்து நிற்பது வாக்குகளை பிரிக்கும் என்கின்றனர் அரசியல் நோக்கர்கள். இந்த சூழலில் தெற்கில் அதிமுக மற்றும் அமமுக வேட்பாளர்கள் போட்டியிடும் தொகுதிகளை குறிவைத்து வேட்பாளர்களை நிறுத்த சசிகலா திட்டமிட்டிருப்பதாக பேச்சு அடிபடுகிறது. இதன்மூலம் துரோகிகள் நிறுத்தும் வேட்பாளர்களை தோற்கடித்து அரசியலில் தன்னுடைய செல்வாக்கு இன்னும் சரியவில்லை என்பதை நிரூபிப்பாரா? என்ற பார்வையும் முன்வைக்கப்படுகிறது.
சமீபத்தில் கூட ராமதாஸை நேரில் சந்தித்து பேசியிருக்கிறார். இவர்கள் புதிய கூட்டணிக்கு ஏதும் அச்சாரம் போடுகிறார்களா? இல்லை மறைமுக பேச்சுவார்த்தை மூலம் 2026 தேர்தலில் தாக்கத்தை ஏற்படுத்த காய் நகர்த்துவார்களா? போன்ற கேள்விகள் எழுகின்றன. எனவே அடுத்தடுத்து அரசியல் நகர்வுகள் கவனம் பெறக்கூடிய வகையில் மாறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

