அரியலூர் மாவட்டம் திருமழபாடியில் உள்ள அருள்மிகு வைத்தியநாத சுவாமி திருக்கோவிலில் நடைபெற்ற நந்தியெம்பெருமான் திருக்கல்யாண விழாவை, பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கண்டு தரிசனம் செய்தனர்.
திருமணம் ஆகாமல் உள்ள ஆண் பெண் அனைவரும் திருமணமாக வேண்டி அரியலூர் மாவட்டத்தில் உள்ள திருமழபாடி
வைத்தியநாத சுவாமி கோவிலில் நடைபெற்ற நந்தி கல்யாணத்தை பார்த்தால், அனைவருக்கும் முந்தி கல்யாணம் நடக்கும் என்பார்கள். அடுத்த வருடம் நந்தி கல்யாணம் நடப்பதற்க்குள் கல்யாணம் நடக்கும் எண்பது ஜதீகம்.
அதன்படி இன்று பங்குனி மாத புனர்பூசம் நட்சத்திரத்தில் நந்தியெம்பெருமான் திருக்கல்யாணம் விமர்சையாக நடைபெற்றது. திருமழபாடி திரு சுந்தராம்பிகை சமேத வைத்தியநாத சுவாமி திருக்கோயிலில் இந்த தெய்வீக திருமணம் வருடாவருடம் நடைபெறுகிறது.
மணமகனான நந்தியெம்பெருமானுக்கும்
மணமகளான வசிஷ்ட முனிவரின் பேத்தியும் வியாக்ரபாத முனிவரின் மகளுமான சுயசாம்பிகை தேவிக்கும் சிவபெருமானை முன் நின்று திருமணத்தை நடத்தி வைத்ததாக வைதீகம். நேற்று மாலை திருவையாறு கோயிலில் நந்தியெம் பெருமானுக்கு பட்டாபிஷேகமும் நடைபெற்றது. திருமணம் நடைபெறும் நாளான இன்று காலை சுவாமி ஐயாறப்பர், அறம் வளர்த்த நாயகியுடன் கண்ணாடி பல்லக்கிலும்,
நந்தியெம்பெருமான் பட்டுச் சட்டை அணிந்து கையில் செங்கோல் ஏந்தி வெள்ளியில் ஆன தலைப்பாகை அணிந்து மாப்பிள்ளை கோலத்தில் குதிரை வாகனத்திலும் அமர்ந்து வானவேடிக்கை, இன்னிசை கச்சேரி உடன் புறப்பட்டு, அன்று மதியம் கொள்ளிடம் ஆற்றில் இறங்கி திருமழபாடி வந்தடைந்தார். அங்கு கண்ணாடி பல்லக்கில் வீற்றிருக்கும் சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி மங்கள வாத்தியங்கள் முழங்க மாப்பிள்ளை வீட்டாரை, கொள்ளிடம் ஆற்றில் எதிர்கொண்டு அழைத்து அவர்களை வரவேற்று கோயில் முன் உள்ள திருமண மேடைக்கு அழைத்துச் சென்றார்.
திருமண மேடையில் சுயசாம்பிகை தேவிக்கும் நந்தியெம் பெருமானுக்கும் அனைத்து விதமான அபிஷேகங்கள் நடைபெற்றது.
தொடர்ந்து வேத மந்திரங்கள் முழங்க நாதஸ்வர இன்னிசையுடன் சுந்தராம்பிகை உடனுறை வைத்தியநாதசுவாமி மற்றும் திருவையாறு அறம் வளர்த்தநாயகி உடனுறை ஐயாரப்பர் முன்னிலையிலும் பல்லாயிரக்கணக்கான பக்தர்களுக்கு முன்னிலையிலும் மணமகள் சுயசாம்பிகை தேவியார் கழுத்தில் மணமகன் நந்தியெம் பெருமான் தாலி கட்டினார்.
திருமணம் முடிந்ததும் மணமக்கள் மாலை மாற்றும் நிகழ்வும், அதனை தொடர்ந்து தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து இருவரும் திருக்கல்யாண உற்சவத்தில் பங்கேற்ற பக்தர்களுக்கு காட்சியளிக்கின்றனர்.
இறைவன் சிவபெருமானே முன்நின்று திருமணத்தை நடத்தி வைப்பதால் நந்தியெம்பெருமான் திருமணத்தை காணும் இளைஞர்களுக்கும் பெண்களுக்கும் திருமண தடைகள் நீங்கி காலத்தே திருமணம் கைகூடிவரும் என்பது பக்தர்களின் நம்பிக்கை ஆகும். தமிழ்நாட்டின் பல பகுதிகளில் இருந்து பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் திருமழபாடிக்கு வருகை புரிந்து, நந்தியெம் பெருமான் திருக்கல்யாணத்தை கண்டு தரிசனம் செய்தனர்.