கத்தி முனையில் பெண்ணிடம் நகை பறிக்க முயற்சி
திருச்சி மலைக்கோட்டை, வடக்கு ஆண்டாள் வீதியை சேர்ந்தவர் மோகன் (29). இவர் மனைவியுடன் நேற்று மணப்பாறைக்கு தன் உறவினரின் பணி நிறைவு பாராட்டு விழாவில் பங்கேற்று விட்டு திருச்சி மத்திய பேருந்து நிலையம் வந்தார். அங்கு நிறுத்தி இருந்த இரு சக்கர வாகனத்தை எடுத்து செல்ல வந்தபோது, அங்கு வந்த மர்ம நபர் இவரது மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி செயினை பறிக்க முயன்றார். அப்போது இதை தடுக்க மோகன் சென்றபோது அந்த மர்ம நபர் மோகன் சட்டை பையில் இருந்த செல்போனை பறித்துக் கொண்டு தப்பி ஓடினார். இதுகுறித்து கன்டோன்மென்ட் போலீசார் வழக்கு பதிந்து, புதுக்கோட்டை மாவட்டம் குமாரப்பட்டி, குருத்தாங்கல் பட்டியை சேர்ந்த முத்துக்குமார் (25) என்ற வாலிபரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாலக்கரை காஜா பேட்டையில் கடன் தொல்லையால் வாலிபர் மாயம்
பாலக்கரை காஜா பேட்டை புது தெருவை சேர்ந்தவர் ஜெயராம் (37). இவர் அதிக கடன் பெற்றதாக தெரிகிறது. இதனால் மன உளைச்சலில் இருந்து வந்த ஜெயராம் சம்பவத்தன்று வீட்டை விட்டு சென்றவர் மீண்டும் விடு திரும்பவில்லை. எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. இதுகுறித்த புகாரின் பேரில் பாலக்கரை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
மனநலம் பாதிக்கப்பட்ட பெண் சாவு
திருச்சி வரகனேரி பஜார், முதல் தெருவை சேர்ந்தவர் அஜீரா ( 52 ). இவர் ஆஸ்துமா நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். மேலும் இவர் மனநலம் பாதிக்கப்பட்வர் என கூறப்படுகிறது. இந்த நிலையில் அஜீரா ப்ளீச்சிங் பவுடரை சாப்பிட்டார். அவரது உறவினர்கள் உடனடியாக அவரை திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அஜீரா உயிரிழந்தார். இதுகுறித்து காந்தி மார்க்கெட் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
போலி பத்திரம்-வீட்டு மனை விற்பனை செய்து மோசடி.. 5 பேர் மீது வழக்கு
திருச்சி வரகனேரி பெரியபாளையத்தை சேர்ந்தவர் அப்துல்லா. இவர் கடந்த 2016 ஆம் ஆண்டு உறையூர் திருத்தாந்தோன்றி கிராமத்தில் உள்ள 2, 208 சதுர அடி நிலத்தை 5 பேரிடம் இருந்து பொது அதிகாரம் அளித்து வாங்கியுள்ளார். பின்னர் இந்த 5 பேரும் போலி பத்திரம் தயாரித்து, நிலத்தை தங்கள் பெயரில் பதிவு செய்து அவரை ஏமாற்றியுள்ளனர். இதுகுறித்து வழக்கு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நடந்து வருகிறது. உயர் நீதிமன்ற உத்தரவின் பெயரில் உறையூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.
தடை செய்யப்பட்ட புகையிலை விற்றவர் கைது
திரு ச்சி, சிந்தாமணி அண்ணா சிலை அருகே தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை நடப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் போலீசார் அங்கு ரோந்து சென்று அப்பகுதியில் சந்தேகிக்கும் வகையில் நின்றவரிடம் விசாரணை நடத்தினர். இதில் அவர் காயிதே மில்லத் நகரை சேர்ந்த அப்துல் பசித் ( 39 ) என்பதும், அவர் அங்கு புகையிலை விற்றதும் தெரிந்தது. அவரை கோட்டை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். அவரிடமிருந்து 420 கிராம் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.