இசைஞானி இளையராஜா கடந்த 2 மாதங்களுக்கு முன் லண்டனில் சிம்பொனி இசை நிகழ்ச்சியை அரங்கேற்றினார். இதற்கு அவருக்கு பாராட்டுகள் குவிந்தன. இந்த நிலையில் இன்று இளையராஜா தனது 82வது பிறந்த நாளை கொண்டாடினார்.
முதல்வர் ஸ்டாலின் . முதல்வரின் உதவியாளர் சண்முகம் மற்றும் திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் என ஏராளமானோர் இளையராஜாவுக்கு வாழ்த்து தெரிவித்தனர்.
பிறந்தநாள் விழாவையொட்டி இளையராஜா கூறியதாவது:
லண்டனில் நிகழ்த்திய தனது சிம்பொனி இசை நிகழ்ச்சியை , அதே ஆர்கெஸ்ட்ரா கலைஞர்களை வைத்து உலகம் முழுவதும் நம் பெருமையை சொல்வதைப்போல அவர்களை நம் நாட்டிற்கு அழைத்து வந்து வரும் ஆகஸ்ட் 2 ம் தேதி அதே இசை நிகழ்ச்சியை நம் மக்கள் முன்னிலையில் நடத்தப்போகிறேன்.
இவ்வாறு அவர் கூறினார். அநேகமாக அந்த இசை நிகழ்ச்சி சென்னையில் நடத்த வாய்ப்புள்ளதாக தெரிகிறது.
இளையராஜாவுக்கு பிறந்த நாள் வாழ்த்து தெரிவித்து, சமூகவலைதளத்தில் முதல்வர் ஸ்டாலின் பதிவிட்டுள்ளார். அந்த பதிவில் முதல்வர் ஸ்டாலின் கூறியிருப்பதாவது:
நாட்டுப்புற இசை, மெல்லிசை, துள்ளலிசை, மரபிசை, தமிழிசை, மேற்கத்திய இசை என அனைத்திலும் கரைகண்டு தமிழர்களின் பெருமைமிகு அடையாளமாகத் திகழும் இசைஞானி இளையராஜாவுக்கு என் நெஞ்சம் நிறைந்த பிறந்தநாள் வாழ்த்துகள்!
தங்களின் சிம்பொனி இசை தமிழகத்தில் ஒலிக்க உள்ள ஆகஸ்ட் 2ம் நாளுக்காகக் கோடிக்கணக்கான ரசிகர்களில் ஒருவனாக நானும் காத்திருக்கிறேன். நேற்றும், இன்றும், என்றும் தங்கள் இசை ராஜாங்கத்தின் ஆட்சிதான். இவ்வாறு முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.