Skip to content

வாணியம்பாடி ஆட்டோ டிரைவரின் நேர்மை- போலீசார் பாராட்டு

திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த கிரிசமுத்திரம் பகுதியை சேர்ந்தவர்  ஆட்டோ ஓட்டுநர் பிரகாசம். இவர் 17 வருடங்களாக ஆட்டோ ஓட்டி வருகிறார்,   நேற்று பிரகாசம் தொழிற்சாலை பபணியாளர்களை ஏற்றிக்கொண்டு கிரிசமுத்திரம்  சென்று விட்டு மீண்டும், தனது வீட்டிற்கு  திரும்பியபோது,  கிரிசமுத்திரம் பகுதியில் சாலையோரம்  கிடந்த  ஒரு ஹேண்ட்  பேக்கை பார்த்து, அதை எடுத்தார்.

அந்த பையை திறந்து பார்த்தபோது, அந்த பையில், 2ஏ.டி.எம். கார்டுகள், 19,000 ரூபாய்  ரொக்கப்பணம் இருப்பது தெரியவந்தது, உடனடியாக அப்பணத்தை பிரகாசம், வாணியம்பாடி கிராமிய காவல்நிலையம் சென்று  ஆய்வாளர் பேபியிடம் ஒப்படைத்தார்,

பிரகாசம் ஒப்படைத்த பணம் குறித்து காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது, அப்பணம் பாப்பனப்பல்லி பகுதியை சேர்ந்த நிரோஷா என்ற பெண்ணுடையது என்பதும், அவர் தனது மகள் சுஷ்மிதாவிற்கு கல்லூரி கட்டணம் செலுத்த தங்கநகையை அடகு வைத்து, 19,000 ரூபாய் பணத்தை பையில் வைத்துக்கொண்டு இருசக்கர வாகனத்தில் சென்ற போது, கிரிசமுத்திரம் பகுதியில்  விழுந்து விட்டது தெரியவந்தது,

அதனை தொடர்ந்து, காவல் ஆய்வாளர் பேபி,  நிரோஷாவிடம் விசாரணை செய்து தவற விட்ட பணம் அவருடையது தான் என உறுதியானதை தொடர்ந்து காவல் ஆய்வாளர் பேபி,  பணத்தை நிரோஷாவிடம் ஒப்படைத்தார்.  ஆட்டோ ஓட்டுநர் பிரகாசத்திற்கு  நன்றி தெரிவித்த இன்ஸ்பெக்டர்,  ஆட்டோ டிரைவர் பிரகாசத்திற்கு   சால்வை அணிவித்து பாராட்டினார்..

ஆட்டோ ஓட்டுநர் பிரகாசம் இன்று பல்வேறு கடன் நிறுவனங்களில் வட்டி பணம் செலுத்த இன்று கடைசி நாள் என்பதால், தொடர்ந்து ஆட்டோ ஓட்டி அதில் வருமானத்தை வைத்து, வட்டி செலுத்தலாம் என இருந்த போது, இந்த பணம் கிடைத்ததாகவும், இருந்த போதிலும், அடுத்தவர் பணத்திற்கு நாம் உரிமை கொண்டாடக்கூடாது . பணத்தை இழந்தவர்கள் எப்படி  பதறி இருப்பார்கள் என  எண்ணி,  காவல்துறையினரிடம் ஒப்படைத்ததாக நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார். அவருக்கு சமூக வலைதளங்களில் பாராட்டு குவிந்து வருகிறது.

error: Content is protected !!