பெங்களூரில் பட்டப் பகலில் நடந்த துணிகரக் கொள்ளை பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கர்நாடக மாநிலம் பெங்களூரில் சிஎம்எஸ் நிறுவனத்தின் ஏழு கோடி ரூபாய் மதிப்புள்ள பணம் கொண்ட வேனை, ஜேபி நகர் அசோக் பில்லர் அருகே மூன்று முதல் நான்கு பேர் ஆயுதம் காட்டி தடுத்து நிறுத்தியுள்ளனர் தங்களை RBI அதிகாரிகள் என கூறி வாகன ஊழியர்களை மிரட்டிய கொள்ளையர்கள், பின்னர் டெய்ரி சர்கிள் பறக்கும் பாலம் வரை வேனை கடத்திச் சென்று பணத்தை இன்னோவா காரில் மாற்றி தப்பினர். “இந்தியா அரசு” என எழுதப்பட்டிருந்த அந்த இனோவா, பின்னர் பட்டரஹள்ளி பகுதியில் சிசிடிவியில் பதிவாகியுள்ளது. போலீசார் சிசிடிவி காட்சிகளை ஆராய்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். CMS ஊழியர்களே இதில் தொடர்புடையவர்களாக இருக்கலாம் என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. ஆயுதம் இருந்தும் துப்பாக்கிச் சூடு செய்யாதது மற்றும் தகவல் அளிப்பதில் தாமதம் ஏன் என்ற கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இச்சம்பவம் குறித்து ஏடிஎம் வானில் இருந்த கணக்காளர் டிரைவர் சிப்பந்திகள் உட்பட நான்கு பேரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர் பெங்களூரு போலீஸ் கமிஷனர் சீமாந்த் குமார் சிங், குற்றவாளிகள் விரைவில் கைது செய்யப்படுவார்கள் என உறுதியளித்துள்ளார். பெங்களூர் பகுதியில் பட்டப் பகலில் ஏடிஎம்முக்கு பணம் நிரப்ப சென்ற வேனை கடத்தி கொள்ளையடித்த சம்பவம் பெங்களூரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

