தமிழகம் வந்த பிரதமர் மோடி ஓ.பன்னீர்செல்வத்தை சந்திக்கவில்லை. சந்திக்க வேண்டும் என ஓபிஎஸ் கோரிக்கை வைத்தும் அது நிராகரிக்கப்பட்டது. இந்த நிலையில் ஓபிஎஸ் அப்செட் ஆனார். எனவே அவர் பாஜக கூட்டணியை முறிப்பார் என எதிர்பார்க்கப்பட்டது. இது குறித்து நேற்று அவரை பத்திரிகையாளர்கள் சந்தித்தனர். அப்போது நாளை(இன்று) சொல்வதாக கூறினார்.
அதன்படி இன்று ஓபிஎஸ் சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் 3 மணி நேரம் ஆலோசனை நடத்தினார். இதில் பண்ருட்டி ராமச்சந்திரன், வைத்திலிங்கம், மனோஜ்பாண்டியன் ஆகியோரும் கலந்து கொண்டனர். அதன்பிறகு ஓபிஎஸ் முன்னிலையில் பண்ருட்டி ராமச்சந்திரன் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓபிஎஸ் தலைமையில் தொண்டர்கள் உரிமை மீட்புகுழுவினர் உயர்நிலை ஆலோசனை கூட்டம் நடந்தது. jதற்போதைய அரசியல் நிலைமை, தமிழ்நாடு எதிர்காலம், மக்கள் பிரச்னை குறித்து நீண்ட நேரம் ஆலோசித்து 3 முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டது.
இதுவரை தேசிய ஜனநாயக கூட்டணியில் (பாஜக கூட்டணி) இடம் பெற்றிருந்தோம். இன்று முதல் அந்த கூட்டணியில் இருந்து தனது உறவை முறித்துக்கொண்டு வெளியேறுகிறோம்.
உரிமை மீட்பு குழு சார்பில் ஓ்.பன்னீர்செல்வம், விரைவில் சுற்றுப்பயணம் செல்ல இருக்கிறார். எந்த கட்சியுடன் கூட்டணி என்பது இப்போது முடிவு செய்யவேண்டியது இல்லை. எதிர்காலத்தல் சூழ்நிலைக்கு ஏற்ப கூட்டணி முடிவு செய்யப்படும். தேசிய ஜனநாயக கூட்டணி உறவு முறிந்தது. எதிர்காலத்தில் தான் தேவைக்கு ஏற்ப கூட்டணி குறித்து முடிவு செய்யப்படும். வெளியேறியதற்கான காரணம் நாடறிந்தது தான். எடுத்து சொல்ல வேண்டியது இல்லை. எந்த கட்சியுடன் கூட்டணி என்பது பின்னர் அறிவிப்போம். எந்த கட்சியையும் வீழ்த்த வேண்டும் என்பது எங்கள் குறிக்கோள் அல்ல. யாரையெல்லாம் வாழ்த்த வேண்டும் என்பது தான் எங்கள் குறிக்கோள்
இவ்வாறு அவர் கூறினார்.
இன்று காலை முதல்வரை சந்தித்தது எதேச்சையான சந்திப்பு. திட்டமிட்ட சந்திப்பு அல்ல. நான் சென்னையில் இருந்தால் தியாசாபிகல் சொசைட்டியில் தான் நடைபயிற்சி செய்வது வழக்கம் என்று ஓபிஎஸ் கூறினார்.