Skip to content

ஒசூர் ஏர்போர்ட்டுக்கு வாய்ப்பு இல்ல.. அண்ணாமலை அறிக்கை..

தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று வெளியிட்டுள்ள அறிக்கை…  ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைக்கப்படும் என்று சட்டசபை விதி எண் 110ன் கீழ் முதல்வர் ஸ்டாலின் அறிவித்திருக்கிறார். கடந்த 2022ம் ஆண்டு ஏப்ரல் 4ம் தேதி திமுக எம்.பி., வில்சன் ஓசூர் விமான நிலையம் குறித்துக் கேட்ட கேள்விக்கு, அன்றைய மத்திய விமானப் போக்குவரத்துத் துறை இணையமைச்சர் வி.கே.சிங் தெளிவாகப் பதிலளித்துள்ளார்.  தமிழக அரசு டி.ஏ.ஏ.எல்., நிறுவனத்துடன் ஒப்பந்தம் செய்து கொண்டு, ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்திப் பயன்படுத்தலாம் என்றும் மிகத் தெளிவாகக் கூறியிருந்தார். இரண்டு ஆண்டுகள் கடந்து விட்டன. 30 கோடி ரூபாய் செலவில் ஓசூர் விமான நிலையத்தை மேம்படுத்த எந்த முயற்சிகளும் எடுக்காமல், வெறும் விளம்பரத்துக்காக, ஓசூரில் பன்னாட்டு விமான நிலையம் அமைப்போம் என்று தற்போது மீண்டும் முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டிருக்கிறார். மேலும் பெங்களூர் கெம்பேகவுடா சர்வதேச விமான நிலையத்தில் இருந்து ஒசூர் 150 கி.மீ. தொலைவுக்குள் இருக்கிறது. இந்த கெம்பேகவுடா விமான நிலையத்தில்  இருந்து 150 கி.மீ. தொலைவுக்குள் புதிய விமான நிலையம் அமைக்கக் கூடாது என ஓப்பந்தம் உள்ளது.  எனவே அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஓசூரில் விமான நிலையம் அமைக்க முடியாது.
ஏற்கனவே கடந்த 2022ம் ஆண்டு, 110 விதியின் கீழ் அறிவிக்கப்பட்ட 7,200 புதிய பள்ளி வகுப்பறைகள், 16,390 கி.மீ. நீளமுள்ள சாலைகள் மேம்பாடு, 1,000 புதிய பஸ்கள், 500 மின்சாரப் பஸ்கள் உள்ளிட்டவை, இரண்டு ஆண்டுகளாக அரைகுறை நடவடிக்கைகளோடு நிற்கின்றன. இரண்டு ஆண்டுகளில், பஸ்களைக் கூட வாங்காத திமுக, தற்போது விமான நிலையம் அமைக்கவிருப்பதாகக் கூறியிருப்பது ஆகச்சிறந்த நகைச்சுவை.
கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்றாமல், மூன்று ஆண்டுகளாக விளம்பர அரசியல் நடத்திக்கொண்டிருக்கும் முதல்வர் ஸ்டாலின், நிறைவேற்றச் சாத்தியமேயில்லாத அறிவிப்புகளை வெளியிடுவது யாரை ஏமாற்றுவதற்காக?. இவ்வாறு அண்ணாமலை கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!