கரூர் மாவட்டம் புலியூரை அடுத்த வீரராக்கியம் ரயில் நிலையத்திற்கு நேற்று மதியம் 3 மணியளவில் வந்த நபர் தான் திருச்சி செல்ல வேண்டும் என்றும், சேலத்திலிருந்து திருச்சி வழியாக மயிலாடுதுறை வரை செல்லும் ரயிலில் வெடி குண்டு வைத்திருப்பதாக அங்கு பணியில் இருந்த ரயில் நிலைய மேலாளரிடம் தெரிவித்துள்ளார். அதனை கேட்டு அதிர்ச்சியடைந்த ரயில் நிலைய மேலாளர் கரூர் ரயில் நிலையத்திற்கு தகவல் தெரிவித்துள்ளார். இதனை தொடர்ந்து மதியம் 3.30 மணியளவில் கரூர் ரயில் நிலையத்திற்கு வந்த அந்த பயணிகள் ரயிலை நிறுத்தி கரூர் இருப்புப்பாதை காவல் நிலைய போலீசார் அதிரடி சோதனை செய்தனர். ஆனால், எந்த வெடி குண்டு இருப்பதற்கான எந்த முகாந்திரமும் இல்லை என்பதை உறுதி செய்த போலீசார். அந்த ரயிலில் ஏறி வீரராக்கியம் ரயில் நிலையம் சென்றனர். அங்கு வெடிகுண்டு இருப்பதாக தகவல் தெரிவித்த நபரை பிடித்து விசாரித்ததில், அவர் திருச்சி மாவட்டம் தென்னூரை சார்ந்த கலீல் அஹமது (வயது 50) என்பதும், பள்ளபட்டியில் உள்ள உறவினர் வீட்டிற்கு சென்று விட்டு வீரராக்கியம் ரயில் நிலையம் வந்ததும் தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அவரை கைது செய்த போலீசார் நேற்று மாலை 6 மணியளவில் திருச்சியிலிருந்து ஈரோடு நோக்கி செல்லும் பயணிகள் ரயிலில் ஏற்றி வந்து கரூர் இருப்புப்பாதை காவல் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தி வழக்கு பதிவு செய்து, நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
