தேமுதிக மண்டல பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் சென்னையில் இன்று முதல் 14 ம் தேதி வரை நடைபெறுகிறது. 2026 சட்டமன்ற தேர்தல் பணிகளை மேற்கொள்வது தொடர்பாக மாவட்டச் செயலாளர்கள் தேர்தல் பொறுப்பாளர்கள் உள்ளிட்டோருடன் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் ஆலோசனை நடத்தினார். இதையடுத்து மாவட்ட செயலாளர்களுடனான ஆலோசனைக்கு பின் தேமுதிக பொதுச்செயலாளர் பிரேமலதா செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
தனித்து போட்டியிட தேமுதிகவுக்கு பயம் இல்லை. அதிமுக கூட்டணியில் தேமுதிக இடம்பெறுமா என்பதை இப்போது கூறமுடியாது. 6 மாதங்கள் கட்சிப் பணிகளில் மட்டுமே கவனம் செலுத்த உள்ளோம். கூட்டணி குறித்து முடிவு செய்ய கால அவகாசம் தேவை.தேமுதிக தனித்து போட்டியிடுமா என்பதற்கு காலம்தான் பதில் சொல்லும். கூட்டணி ஆட்சி ஏற்படுவதை வரவேற்கிறேன்.
2024ல் மாநிலங்களவை சீட் தருவதாக எழுதி கையெழுத்து போட்டு கொடுத்தவர் எடப்பாடி. மாநிலங்களவை சீட் தருவதாக அதிமுக எழுதி தந்த கடிதத்தை நாகரிகம் கருதி வெளியிடாமல் உள்ளோம். எழுத்துப்பூர்வமாக உறுதி தரவில்லை என்று எடப்பாடி கூறியது தேமுதிகவினரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
விஜய் எப்போதும் எங்கள் வீட்டு பையன். தவெகவுடன் தேமுதிக கூட்டணி அமைக்குமா என்பதை விஜயிடம்தான் கேட்க வேண்டும்,இந்தியா கூட்டணியில் இணைய செல்வப்பெருந்தகை அழைப்பு விடுத்ததற்கு நன்றி . அதே நேரத்தில் கூட்டணிக்கு தலைமை பொறுப்பில் இருக்கும் முதல்வர்தான் இதுபற்றி சொல்ல வேண்டும்.
இவ்வாறு பிரேமலதா கூறினார்.
