சேலம் மாவட்டம் வாழப்பாடி அருகே உள்ள வடுகநத்தம்பட்டி பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த ராமதாஸ் ஆதரவாளரான பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளர் சத்யராஜின் தந்தை இறப்பு நிகழ்வுக்கு , எம்எல்ஏ அருள் தனது ஆதரவாளர்களுடன் காரில் சென்று விட்டு திரும்பும் போது, வடுகநத்தம்பட்டி என்ற இடத்தில் தரைப்பாலம் பகுதியில் அன்புமணியின் ஆதரவாளர்களான ஜெயபிரகாஷ் தலைமையிலான கும்பல் கார்களை வழி மறித்து தாக்கியதாக கூறப்படுகிறது. இதனால் இருதரப்பினருக்கும் இடையே கல் வீச்சு , கத்தி , உருட்டு கட்டையால் தாக்கி கொண்டதால் , அங்கு போர்க்களம் போல காட்சி அளித்தது.
இதனையடுத்து காவல்துறையினர் வந்து இரு தரப்பினரையும் அப்புறப்படுத்தினர். இதில் பத்துக்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர்.
ராமதாஸின் ஆதரவாளர்கள் ஏழு பேர் சேலம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அதேபோல அன்புமணியின் ஆதரவாளர்கள் இரண்டு பேர் தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த நிலையில் வாழப்பாடி போலீசார் , அருள் தரப்பினர் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து அன்புமணி ஆதரவாளர்களான ஜெயப்பிரகாஷ் உள்ளிட்ட ஏழு பேரை கைது செய்துள்ளனர். இந்த நிலையில் அன்புமணி ஆதரவாளர்களான மேட்டூர் சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மற்றும் மயிலம் சட்டமன்ற உறுப்பினர் சிவக்குமார் , முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் கணேஷ்குமார் ஆகியோர் தங்களது நிர்வாகிகளுடன் வந்து சேலம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் அன்புமணி ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்திய அருள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என புகார் தெரிவித்தனர். மேலும் தங்களின் புகார் மீது உடனடி நடவடிக்கை எடுத்து வழக்கு பதிவு செய்து , அவர்களை கைது செய்யும் வரை போராட்டத்தில் ஈடுபடுவோம் எனக் கூறி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் நுழைவாயில் முன்பாக அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாமக சட்டமன்ற உறுப்பினர்கள் சதாசிவம் , சிவக்குமார் மற்றும் பாமக அன்புமணி அணியின் மாநில இளைஞர் சங்க தலைவர் கணேஷ்குமார் ஆகியோர் தலைமையில் நிர்வாகிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. இதனை எடுத்து சமாதானம் செய்த போலீசார், வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். பின்னர் வாழப்பாடி காவல்துறையினர் , அன்புமணி ஆதரவாளர்கள் கொடுத்த புகாரின் பேரில் சட்டமன்ற உறுப்பினர் அருள் உள்பட 40 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர், கொலை முயற்சி , ஆயுதங்களைக் கொண்டு தாக்குதல் உள்ளிட்ட ஐந்து பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர் இது குறித்த தகவலை போராட்டத்தில் ஈடுபட்ட அன்புமணி ஆதார் கார்டு போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர் இதனால் சுமார் 2 மணி நேரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பரபரப்பு ஏற்பட்டது.

