கோவை வடக்கு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில், லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியர் கையும், களவுமாகப் பிடிபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கோவை, பாலசுந்தரம் சாலையில் உள்ள வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் எழுத்தராக (Clerk) பணியாற்றி வரும் ஹரிஹரன் என்பவர், பட்டா பெயர் மாற்றம் செய்ய வரும் பொதுமக்களிடம் லஞ்சம் வாங்குவதாக தொடர்ந்து புகார்கள் எழுந்தன.
இந்நிலையில், பட்டா பெயர் மாற்றத்திற்காக அணுகிய ஒரு நபரிடம், ஹரிஹரன் 7,000 ரூபாய் லஞ்சம் கேட்டதாகத் தெரிகிறது.
அரசு அதிகாரி கேட்ட லஞ்சப் பணத்தைக் கொடுக்க விரும்பாத அந்த நபர், இது குறித்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரிடம் ரகசியப் புகார் அளித்தார்.
லஞ்ச ஒழிப்பு போலீசார் கூறிய ஆலோசனைப்படி இரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை ஹரிஹரனிடம் அந்த நபர் வழங்கிய போது, அலுவலகத்தின் பதிவு அறை (Record Room) வளாகத்தில் மறைந்து இருந்த லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ஹரிஹரனை வளைத்துப் பிடித்தனர். லஞ்சம் வாங்கியதை உறுதி செய்த போலீசார், அவரை அங்கேயே வைத்து விசாரணை நடத்தி கைது செய்து சிறையில் அடைத்தனர்.
இந்தத் திடீர் சோதனையால், வடக்கு வட்டாட்சியர் அலுவலகத்தில் இருந்த மற்ற ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் மத்தியில் அச்சத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.

