தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின், தலைசுற்றல் காரணமாக சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு 4 தினங்களாக சிகிச்சை பெற்று வருகிறார். இன்று அவருக்கு இதய செயல்பாட்டை அறியும் ஆஞ்சியோ பரிசோதனை செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து மருத்துவமனை சார்பில் ஒரு அறிக்கை வெளியிடப்பட்டது. அதில் முதல்வருக்கு ஏன் தலை சுற்றல் ஏற்பட்டது என்பது குறித்து தெரிவித்து உள்ளனர். அதில் கூறி இருப்பதாவது:
முதல்வருக்கு அப்பல்லோ மருத்துவமனையில் மேற்கொள்ளப்பட்ட பல்வேறு மருத்துவப் பரிசோதனைகளில் இதயத்துடிப்பில் உள்ள சில வேறுபாடுகள் காரணமாகவே இந்த தலைசுற்றல் ஏற்பட்டுள்ளதாக கண்டறியப்பட்டது.இதய சிகிச்சை மருத்துவர் டாக்டர் ஜி.செங்குட்டுவேலு அவர்களின் தலைமையிலான மருத்துவ வல்லுநர் குழுவின் அறிவுரையின்படி, இதனை சரி செய்வதற்கான சிகிச்சைமுறை அப்பல்லோ மருத்துவமனையில் இன்று காலை செய்யப்பட்டது. இன்று மேற்கொள்ளப்பட்ட ஆஞ்சியோகிராம் சோதனையும் இயல்பாக இருந்தது. முதல்-அமைச்சர் நலமாக உள்ளார். தனது வழக்கமான பணிகளை இரண்டு நாட்களில் மேற்கொள்வார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.