உலகின் பல்வேறு நாடுகளில், கொரோனா தொற்று மீண்டும் பரவி வருகிறது. அதே நேரத்தில் 2019ல் ஏற்பட்டது போல வீரியம் மிக்க தொற்றாக இல்லாமல், வீரியம் குறைந்த நிலையில் பரவுகிறது. அதே நேரத்தில் இணை நோய் உள்ளவர்கள் இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்தியாவிலும், குறிப்பாக தமிழ்நாட்டிலும் கொரோனா பரவி வருகிறது. இந்தியாவில் ஒருவருக்கு NB.1.8.1 வேரியண்ட் கொரோனா கண்டறியப்பட்டுள்ள நிலையில், மேலும் 4 பேருக்கு LF.7 வகை கொரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளது. இந்த இரு வேரியண்டுகளையும் உலக சுகாதார அமைப்பு கண்காணிக்கப்படும் வேரியண்டுகளாக அறிவித்துள்ளன.
இந்த இரு வேரியண்டுகளின் செயல்பாடுகளை உலக சுகாதார மையத்தின் ஆய்வாளர்கள் கண்காணித்து வருகிறார்கள். அதேநேரம் இவை ஆபத்தை உண்டாக்கும் வேரியண்டுகளாக அறிவிக்கப்படவில்லை. இப்போது சீனா உட்பட ஆசியாவின் பெரும்பகுதியில் கொரோனா அதிகரிக்க இந்த வேரியண்டு தான் காரணமாக இருக்கிறது. இதனால் இதை ஆய்வாளர்கள் தீவிரமாகக் கண்காணித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் NB.1.8.1 மற்றும் LF.7 கண்டறியப்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது. கடந்த ஏப்ரல் மாதம் தமிழகத்தில் ஒருவரிடம் இருந்து சேகரிக்கப்ட்ட மாதிரியில் NB.1.8.1 வேரியண்டு கண்டறியப்பட்டுள்ளது. இந்த மாதம் குஜராத்தில் நான்கு பேருக்கு LF.7 கேஸ்கள் கண்டறியப்பட்டன.
எனவே இந்த பரவலை தடுக்க பொது சுகாதாரத்துறை சட்டத்தின்கீழ் சில அறிவுரைகள் மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ளது. அதனடிப்படையில், மக்கள் அதிகம் கூடும் கண்காட்சி, திருவிழாக்கள் போன்றவற்றில் வழங்கப்படும் உணவுப்பொருட்கள், குடிநீர், ஜூஸ் போன்றவற்றின் சுகாதார தன்மையை கண்காணிக்க பொது சுகாதாரத்துறை இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
கோயில் அன்னதானங்களில் எவ்வாறான சுகாதர முறை பின்பற்றப்படுகிறது என்பதையும் கண்காணிக்க உத்தரவிட்டுள்ளார். மக்கள் அதிகம் கூடும் இடங்களில் கழிப்பிட வசதிகள், பாதுகாப்பான சுத்தமான குடிநீர் கிடைப்பதை உறுதி செய்ய வேண்டும் எனவும் மாவட்ட மருத்துவ அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.
இந்த ஆண்டு மழை காலம் முன்னதாகவே தொடங்கியதன் காரணமாக தொற்று நோய் பாதிப்புகளும் சில பகுதிகளில் அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதனால் இவற்றை தடுப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் எனவும் பொது இடங்களில் மக்கள் அதிக அளவில் கூடுவதை தவிர்க்க வேண்டும் எனவும் பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வ விநாயகம் உத்தரவிட்டுள்ளார்.