Skip to content

விசாரணை கைதி மரண வழக்கில் எஸ்.ஐ உள்பட 3 போலீசாருக்கு ஆயுள் தண்டனை

கடந்த 2009-ம் ஆண்டு மார்ச் மாதம், குட்டி பழனி என்கிற பழனி குடிபோதையில் தகராறு செய்வதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் அவரை விசாரணைக்கு அழைத்துச் செல்ல சென்னை கோட்டூர்புரம் போலீசார் முயற்சி செய்தனர். ஆனால் போதையில் போலீசாரிடம் தகராறு செய்த பழனி, மருத்துவ பரிசோதனைக்கு ஒத்துழைக்கவில்லை. இதனால் அவரை போலீசார் கொடூரமாக தாக்கியதாக கூறப்படுகிறது. அதன்பின்னர், வீட்டிற்கு அனுப்பப்பட்ட பழனி மரணமடைந்ததால், கோட்டூர்புரம் போலீசாருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கக் கோரி பழனியின் தந்தை ரங்கநாதன் கோட்டூர்புரம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இந்த புகார் அடிப்படையில் கோட்டூர்புரம் இன்ஸ்பெக்டர் வழக்குப்பதிவு செய்து, அதை சைதாப்பேட்டை உதவி கமிஷனருக்கு அனுப்பி வைத்தார்.

போலீசார் மீதான வழக்கு என்பதால், மாவட்ட கலெக்டர் உத்தரவின்படி, சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட் நடத்திய விசாரணையில், பழனியின் மரணத்திற்கு காவல்துறையினரின் தாக்குதல் தான் காரணம் என அரசுக்கு அறிக்கை தாக்கல் செய்யபட்டது. அதன் அடிப்படையில், சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட் சி.ராஜேந்திரனின் புகாரை அடிப்படையாக கொண்டு, சம்பந்தப்பட்ட காவல்துறையினர் மீது வழக்குப்பதிவு செய்ய அரசு ஒப்புதல் அளித்தது. அதன்படி, கோட்டூர்புரம் காவல் நிலைய குற்றப்பிரிவு எஸ்.ஐ.ஆக இருந்த பி. ஆறுமுகம் ஏட்டுகள் எம். மனோகரன், பி.என். ஹரிஹர சுப்ரமணியன், வின்சென்ட்,ஏழுமலை ஆகிய 5 பேர் மீது கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கின் விசாரணை சென்னை அல்லிக்குளம் வணிக வளாகத்தில் அமைந்துள்ள 6வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்றபோது, புகார்தாரரான சப்-டிவிசனல் மாஜிஸ்திரேட் தரப்பில் அரசின் பெருநகர கூடுதல் குற்றவியல் வக்கீல் கே.தேவபிரசாத் ஆஜராகி வாதிட்டார். வழக்கு நிலுவையில் இருந்தகாலத்தில் வின்சென்ட் மற்றும் ஏழுமலை ஆகியோர் இறந்துவிட்டதால், அவர்கள் இருவர் மீதும் குற்றச்சாட்டு பதிவு செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்த வழக்கில் தீர்ப்பளித்துள்ள நீதிபதி வி.பாண்டியராஜ், பழனியின் மரணத்திற்கு காவல்துறையினர் தாக்கியதுதான் காரணம் என விசாரணையில் நிரூபணம் ஆவதாக கூறி, கோட்டூர்புரம் எஸ்.ஐ.-ஆக இருந்த பி. ஆறுமுகம் ஏட்டுகளாக இருந்த எம். மனோகரன், பி.என். ஹரிஹர சுப்ரமணியன் ஆகியோர் குற்றவாளிகள் என அறிவித்தார். மேலும் அவர்களது குற்றங்களுக்காக எஸ்.ஐ. உள்ளிட்ட மூவருக்கும் ஆயுள் தண்டனையும், தலா ரூ. 10 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி உத்தரவிட்டார்.

 

 

error: Content is protected !!