டெல்லி செங்கோட்டை அருகே 10.11.2025 அன்று மாலை சாலையில் நின்று கொண்டிருந்த ‘ஹுண்டாய் ஐ-20’ கார் வெடித்துச் சிதறிய சம்பவத்தில் 13 பேர் பலியாகி உள்ளனர். பொதுமக்கள் பலர் காயங்களுடன் டெல்லியில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கின்றனர். டெல்லி கார் வெடிப்பு வழக்கை, தேசிய புலனாய்வு முகமையிடம் (NIA) ஒப்படைத்தது உள்துறை அமைச்சகம். இந்த சம்பவத்தில், பயங்கரவாத தொடர்பு இருப்பதாக சந்தேகிக்கப்படுவதால், வழக்கு என்ஐஏ-விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. டெல்லி செங்கோட்டை அருகே நடந்த கார் வெடிப்பு சம்பவம் தொடர்பாக உபா (UAPA) சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. சம்பவ பகுதியில் என்ஐஏ குழுவினர் விசாரணை நடத்தினர். தேசிய பாதுகாப்புப் படையினரும் சம்பவ பகுதியிலிருந்து மாதிரிகளை சேகரித்துச் சென்றனர். தடயவியல் நிபுணர்கள் தனியாக சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில் செங்கோட்டை கார் குண்டு வெடிப்பில் ஈடுபட்டதாக கூறப்படும் டாக்டர் முகமது உமர் பணியாற்றிய அல் ஃபலா மருத்துவமனையை சேர்ந்த மேலும் 3 டாக்டர்கள் கைது செய்யப்பட்டனர். காலை முதல் நடைபெற்ற விசாரணை மற்றும் சோதனையை தொடர்ந்து டெல்லி சிஐடி போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.

