Skip to content

கொடிக்கம்பம் அகற்றம் பணி, கரூர் திமுகவினர் தொடங்கினர்

சாலையோரங்கள், பொது இடங்களில் உள்ள கட்சிக் கொடிக்கம்பங்களை  வரும் ஜூலை 2-ம் தேதிக்குள் அகற்ற வேண்டும் என்றும், அவ்வாறு அகற்றாத மாவட்ட ஆட்சியர்கள் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும் என்றும் சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கோர்ட் உத்தரவின் காலக்கெடு  முடிவடைய  இன்னும்  ஒருவார காலமே உள்ளது.  கோர்ட் உத்தரவை மதித்து,  சாலையோரங்களில் உள்ள  திமுக கொடிகம்பங்களை அகற்றும்படி கரூர் மாவட்ட திமுக செயலாளரும், முன்னாள் அமைச்சருமான செந்தில்  பாலாஜி கட்சி நிர்வாகிளுக்கு உத்தரவிட்டார்.

ஒவ்வொரு நகரம், ஒன்றியம், பேரூர் பகுதிகளில்  கோர்ட் உத்தரவுபடி எத்தனை  திமுக கொடிகம்பங்களை அகற்ற வேண்டும் என்பதை கட்சியினர் உடனடியாக கணக்கெடுத்து அவற்றை  அகற்றுங்கள் என  செந்தில் பாலாஜி   கட்சி நிர்வாகிகளை அறிவுறுத்தினார்.

அதன்படி திமுக கொடி கம்பங்கள் அகற்றும்பணி கரூர் மாவட்டத்தில் இன்று தொடங்கியது.

இதற்கிடையே, கரூர் மாநகராட்சிக்கு உட்பட்ட நெடுஞ்சாலைகளில் வைக்கப்பட்டுள்ள அரசியல் கட்சியினரின் கொடிக்கம்பங்கள் அகற்றும் பணி நடைபெறும் என்று நெடுஞ்சாலைத்துறை சார்பில் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இஇந்த நிலையில்,  கரூர்  ராயனூர் பேருந்து நிறுத்தம் அருகில் இருந்த 50 அடி உயர திமுக  கொடி கம்பத்தினை திமுகவினர் தாங்களாக முன்வந்து அகற்றினர்.

பொக்லைன் எந்திரத்தின் உதவியுடன் 50 அடி உயர ராட்சத கொடிக்கம்பம் அகற்றும் பணியின் போது அப்பகுதியில் சிறிது நேரம் போக்குவரத்து தடைப்பட்டது. பாதுகாப்புடன் கொடிகம்பத்தை அகற்றினர். திமுகவினரின் இந்த பணிக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.

error: Content is protected !!