திருப்பூர் மாவட்டம் கோவிந்தபாளையம் பகுதியில் இருந்து பழைய பேருந்து நிலையம் நோக்கி அரசு பேருந்து ஒன்று சென்றுகொண்டிருந்தது. இந்த பேருந்தில், ஜெயக்குமார் என்பவர் ஏறி உள்ளார். மதுபோதையில் இருந்த அவர், பயணிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு தகராறு செய்துள்ளார். இதனையடுத்து ஜெயக்குமாரை எஸ்.ஆர்.சி பேருந்து நிறுத்தத்தில் நடத்துனர் மோகன்ராஜ் இறக்கிவிட்டுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த ஜெயக்குமார், கீழே இருந்த கல்லை எடுத்து பேருந்தின் மீது வீசி உள்ளார். இதில் பேருந்தின் முன் பக்க கண்ணாடி உடைந்து முன் சீட்டில் அமர்ந்திருந்த 20 வயது இளம்பெண் தலை மீது கல் விழுந்துள்ளது. மேலும், கண்ணாடி துகள்கள் பட்டு படுகாயம் அடைந்தார். அத்துடன், பேருந்தில் முன்பக்க கண்ணாடி முற்றிலுமாக உடைந்து சேதமடைந்தது. இதையடுத்து ஜெயக்குமாரை, சக பயணிகள் தாக்கி போலீசாரிடம் ஒப்படைத்தனர்.