இந்தியாவில் தேன் உற்பத்திக்கு சரியான அங்கீகாரம் கிடைக்கவில்லை என தேன் உற்பத்தியாளர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். பொள்ளாச்சி பகுதியில் தோட்டங்களில் தென்னை, வாழை போன்ற பயிர்களுக்கு மத்தியில் காலனி அமைத்து விவசாயிகள் தேன் உற்பத்தி செய்து வருகின்றனர்.
இயற்கை சீற்றங்கள் மற்றும் பல்வேறு தட்பவெப்ப சூழ்நிலைகளிலும், பெரும் இன்னல்களுக்கு மத்தியிலும் தேன் உற்பத்தி செய்து வரும் விவசாயிகளுக்கு இத்தொழிலில் உரிய லாபம் கிடைக்காததால் பல்வேறு தேன் உற்பத்தியாளர்களும் வேறு தொழிலுக்கு உந்தப்பட்டு வருகின்றனர். சுமார் ஒரு கிலோ தேன் எடுக்க மூன்று மாதங்கள் ஆகும் நிலையில், அதற்கிடையே மழை, வெப்ப காற்று,போன்றவை தேன் உற்பத்தி செய்ய கடும் சவாலாக இருப்பதாகவும். கவர்ச்சிகரமான பேக்கிங், இலவசம் என வசீகரிக்கும் ஆஃபர்கள் மூலம் சந்தையில் அதிகமாக போலி தேன் உலவி வருகின்றன. கலப்பட தேன்களின் ஆதிக்கத்தால் தமிழகத்தில் மட்டும் உற்பத்தி செய்யப்பட்ட சுமார் மூன்று லட்சம் கிலோ தேன் தேக்கமாகியுள்ளதாக வருத்தம் தெரிவிக்கும் உற்பத்தியாளர்கள்.
உடலுக்கு ஆரோக்கியம் தரும் தேன் குறித்து போதிய புரிதல் இல்லாததாலும், தகுந்த விழிப்புணர்வு இல்லாததாலும் பொதுமக்கள் தேன் பயன்படுத்துவதில் தயக்கம் காட்டி வருகின்றனர். மேலும் தேனில் இருந்து மதிப்பு கூட்டப்பட்ட பொருட்களான தேன் மெழுகு சிலைகள்,தேன் அத்தி,தேன் பேரிச்சை,ஊட்டச்சத்து பானம் பலவற்றையும் தயார் செய்யும் தேன் உற்பத்தியாளர்கள் அதற்கு புவிசார் குறியீடு வழங்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளனர். இதுகுறித்து தேன் உற்பத்தியாளர்கள் கூறுகையில்…
தேன் உற்பத்தியாளர்களுக்கு என தனி நல வாரியம் அமைக்க வேண்டும்,சந்தையில் உள்ள போலி கலப்பட தேன் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்,வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்படும் ரசாயன தேனுக்கு பதிலாக உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் நாட்டு தேன்களுக்கு உரிய அங்கீகாரம் வழங்க வேண்டும், பயிர்களுக்கு காப்பீடு வழங்குவது போல் தேனுக்கும்கும் இழப்பு காப்பீடு ஏற்படுத்தி தர வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை முன்னிறுத்தி மத்திய மாநில அரசுகளிடம் தங்களது நிலைப்பாட்டினை தெரிவித்துள்ளனர் மேலும் மத்திய மாநில அரசுகள் ஏற்றுமதி வரியை குறைக்க வேண்டும் என கோரிக்கை வைக்கின்றனர்.