திருச்சி மக்களவை தொகுதி எம்.பி. துரை வைகோ விடுத்துள்ள ஒரு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
இரவென்ன பகலென்ன திருச்சியின் திசையெங்கும் எல்லா நேரத்திலும் தமிழ் தானே ஒலிக்க வேண்டும்? இங்கு ஹிந்திக்கு எதற்கு இடம்?
திருச்சி பண்பலை 102.1 ல் பகலில் தமிழும், இரவில் ஹிந்தியுமாக ஒலிபரப்பு செய்வதற்கு கண்டனம் தெரிவித்து, அதனை நிறுத்தி, முழு நேரமும் தமிழில் மட்டுமே ஒலிபரப்பு செய்ய வேண்டும் என்று கடந்த 31.05.2025 அன்று அறிக்கை வெளியிட்டிருந்தேன். அதில் ஆல் இந்தியா ரேடியோ மற்றும் ஒன்றிய அரசின் தகவல் மற்றும் ஒலிபரப்பு துறை அமைச்சகத்திற்கு வேண்டுகோள் விடுத்திருந்தேன்.
எனது கோரிக்கையை வெறும் 24 மணி நேரத்திற்குள் ஏற்றுக்கொண்டு, 31.05.2025 அன்றைய இரவே தமிழில் ஒலிபரப்பு செய்யப்பட்டுள்ளது என்ற மகிழ்ச்சியான செய்தியை இங்கு நான் பதிவு செய்கிறேன்.
இதுவரை இரவு டெல்லி பண்பலையை ஒலிபரப்பு செய்துவந்த சென்னை வானொலி நிலையம் இனி, ‘விவித் பாரதி தமிழை’ இரவில் ஒலிபரப்பு செய்யும் என்றும், அது, திருச்சி பண்பலை 102.1 – ல் அஞ்சலாகும் என்றும், இனி திருச்சி பண்பலையில் பகலிலும் இரவிலும் தமிழில் தான் ஒலிபரப்பு இருக்கும் என்றும் தகவல் கிடைத்துள்ளது.
மொழி என்பது வெறும் தகவல் பரிமாற்றத்திற்கான கருவி மட்டுமல்ல; அது நம் ஆன்மாவின் அடையாளம். தாய்மொழி என்பது பல்லாயிரக்கணக்கான நுண் உணர்வுகளை தன்னகத்தே கொண்டு மொழிப்பற்றாகவும், மொழி மீதான காதலாகவும் மாறிவிடும் பண்புடையது.
அப்படிப்பட்ட நம் தமிழ் மொழி நமது திருச்சி பண்பலையில் இரவில் இல்லையே என்பது பலருக்கும் வருத்தத்தை தந்த நிலையில், தமிழ் மக்களின் உணர்வுகளுக்கு மதிப்பளித்து, எனது கோரிக்கையை ஏற்று உடனே மீண்டும் தமிழுக்கு மாற்றியுள்ளது பாராட்டுக்குரியது. உள்ளபடியே இதை நான் வெற்றி செய்தியாக கருதுகிறேன்.
இதனை எனது கவனத்திற்கு கொண்டு வந்த தோழர்களுக்கும், ஆல் இந்தியா ரேடியோ அதிகாரிகளுக்கும், ஒன்றிய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சகத்திற்கும், ஒன்றிய அரசுக்கும் எனது நெஞ்சார்ந்த நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
அத்துடன் இன்னொரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகிறேன்.
இன்றைய நிலையில் இரவில் இன்னொரு நிலையத்தின் ஒலிபரப்பை தான் திருச்சி வானொலி அஞ்சல் செய்ய முடியும். இந்நிலையை மாற்றி இணை ஒலிபரப்பு இல்லாமல் பகல் நேர ஒலிபரப்பு போலவே இரவிலும் திருச்சி வானொலியில் தனி ஒலிபரப்பாக திருச்சி வானொலி நிலையமே நிகழ்ச்சிகளை ஒலிபரப்பு செய்யும் உரிமையை கொண்டுவர வேண்டும். அத்துடன் 20 கி.வாட் ஒலிபரப்பு திறன்கொண்டதாக திருச்சி பண்பலையை தரம் உயர்த்த வேண்டும்.
அப்படி கொண்டுவரப்பட்டால், வேலை வாய்ப்புகள் பெருகும், விளம்பர வருவாய் உயரும், பொழுபோக்கு அம்சங்கள் அதிகரிக்கும், முக்கியமாக 10 மாவட்டங்களை உள்ளடக்கிய மத்திய மண்டல செய்திகளை தனித்தன்மையோடு ஒலிபரப்பு செய்ய முடியும்.
எனவே இதனையும் கருத்தில் கொண்டு, திருச்சி வானொலி நிலையத்திற்கு 24×7 தனி ஒலிபரப்பு செய்யும் உரிமையை வழங்கிட வேண்டும் என்றும் கேட்டுக்கொள்கிறேன்.
இவ்வாறு அவர் கூறி உள்ளார்.
