Skip to content

விடா முயற்சியும் நிச்சயம் வாழ்வில் உயர்வைதரும்..விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேச்சு

கோவை, பொள்ளாச்சி மைல்ஸ்டோன் நிறுவனத்தின் குடியிருப்பு வளாக திறப்பு விழா, 3ம் ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா நேற்று நடந்தது. மைல்ஸ்டோன் நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர்கள் ராஜேந்திரன், திருப்பதி ஆகியோர் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 850 மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொண்ட முன்னாள் இஸ்ரோ தலைவர் விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை பேசும்போது, இந்தியாவின் பெரும்பகுதியை பிடித்த அசோகர் மேலும் சில இடங்களை மட்டும் பிடித்திருந்தால் முடிசூடா மன்னன் ஆகி இருப்பார். ஆனால் அதை தாண்டி அவர் பௌத்த மதத்தை தழுவி மக்களுக்கு நன்மை செய்ததால்தான் இன்றைக்கும் அசோகர் நினைக்கப்படுகிறார், பேசப்படுகிறார்.
ஆகவே மாணவர்கள் வரலாறை தெரிந்துகொள்ள வேண்டியது மிக அவசியம். தனிமனிதன், ஒரு வீடு, இந்த சமுதாயம் ஏன் இந்த நாடு முழுமையாக வளர்ச்சியும் மாற்றத்தையும் காண்பது கல்வியால் மட்டுமே. தமிழக அரசும் தனியார் நிறுவனங்களும் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து பல்வேறு மாற்றங்களையும் செய்து வருகின்றன. இதனை இன்றைய இளம் தலைமுறை என நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கல்வி பயிலும் பருவத்திலேயே மாணவர்கள் முறையான பயிற்சியும் விடாமுயற்சியும் கொண்டிருந்தால் நிச்சயம் வாழ்வில் உயர்ந்த நிலையை அடையலாம். இவ்வாறு அவர் பேசினார்.
தொடர்ந்து அவர் செய்தியாளர்களிடம் பேசுகையில், பொருளாதார சூழல்களால் சிலரால் கல்வியை தொடர முடியாமல் போகும் நிலை உள்ளது. இதுபோன்ற ஏற்றத்தாழ்வுகள் எதிர்கால சந்ததியினரை பாதிக்கவும் செய்யலாம். அதே வேளையில் கல்வி பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் விதமாக இது போன்ற நிறுவனங்கள் உதவித்தொகை வழங்குதல் உள்ளிட்ட உதவிகளை செய்வதன் மூலம் அந்த ஏற்றத்தாழ்வுகள் களையப்படும்.
அரசும் மாணவர்கள் நலனில் அக்கறை கொண்டு பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. இதனை மாணவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு நாட்டின் வளர்ச்சியில் விஞ்ஞானத்தை போல் விவசாயமும் மிக அவசியமானதாகும். நிலப்பரப்பு சுருங்குதல், அதிகமா நீர் தேவை உள்ளிட்ட பல காரணங்களால் விவசாயத்தில் பாதிப்பு ஏற்படும் போது நிச்சயம் எதிர்காலத்தில் விஞ்ஞானம் அதற்கு கை கொடுக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை. இவ்வாறு அவர் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் முன்னாள் டிஜிபி பாரி, பொள்ளாச்சி நகராட்சியின் முன்னாள் தலைவர் கிருஷ்ணகுமார், முன்னாள் எம்எல்ஏ சண்முகம், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவையின் தலைவர் வெள்ளை நடராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

error: Content is protected !!