ஈரோடு மாவட்டம், செம்பம்பாளையம் பகுதியை சேர்ந்த கணேஷ் என்பவரது மகன் மோனிஷ்( 19). இவர் கோவை மாவட்டம் பொள்ளாச்சி உடுமலை தேசிய நெடுஞ்சாலையில் உள்ள மகாலிங்கம் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு படித்து வந்தார். இரண்டாம் ஆண்டு முடிந்து மூன்றாம் ஆண்டு செல்வதற்கான விடுப்பில் இருந்த அவர் மாக்கினாம்பட்டி பகுதியில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கியிருந்தார். இந்நிலையில் நேற்று பொள்ளாச்சி கடைவீதி பகுதியில் தன்னுடைய இருசக்கர வாகனத்தை ஓட்டி வந்த மோனிஷ் சிறுமி ஒருவர் மீது மோதி வாகன விபத்தை ஏற்படுத்தியுள்ளார். இதில் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சிறுமியின் தாய் கொடுத்த புகாரின் பேரில் விபத்து ஏற்படுத்திய கல்லூரி மாணவரின் பெற்றோரை அழைத்த காவல்துறையினர் தகவலை தெரிவித்ததாக தெரிகிறது. நேற்று இரவு விபத்து ஏற்படுத்திய மாணவனின் பெற்றோர் அவரை அழைத்து கடுமையாக கண்டித்ததாகவும் இதனால் மனமுடைந்த மாணவன் தான் தங்கியிருந்த வீட்டில் இருந்த மின் விசிறியில் தூக்கிட்டு தற்கொலை செய்துள்ளார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த பொள்ளாச்சி கிழக்கு காவல் நிலையம் போலீசார் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கோவை இ எஸ் ஐ மருத்துவமனைக்கு கொண்டு சென்று விசாரணையை தொடர்ந்துள்ளனர்.
பெற்றோர் திட்டியதால்… பொள்ளாச்சியில் இன்ஜினியரிங் மாணவர் தற்கொலை
- by Authour
