பாரதியார் பல்கலைக்கழகத்திற்காக நிலம் கொடுத்த விவசாயிகள், உரிய இழப்பீடு வழங்க கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். பாரதியார் பல்கலைக்கழகத்திற்கு 960 ஏக்கர் நிலத்தை விவசாயிகள் கொடுத்துள்ளனர்.40 ஆண்டுகளுக்கும் மேலாக உரிய இழப்பீடு வழங்க கோரி நிலம் கொடுத்தவர்கள் போராடி வருகின்றனர். குறிப்பாக கோவை நீதிமன்றம் அக்டோபர் 2007 ஆம் ஆண்டு இழப்பீடுகள் குறித்து வழங்கிய தீர்ப்புகளை எதிர்த்து 3 வருடங்கள் கழித்து 2011 மற்றும் 2012 ஆம் ஆண்டுகளில் செய்யப்பட்ட மேல்முறையீடுகளுக்கு
2022 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் தீர்ப்புகள் வந்தன.
இந்த நிலையில் திமுக ஆட்சி அமைந்ததும் 100 நாட்களில் இதற்கான முடிவெடுக்கப்படும் என முதல்வர் கூறியதாகவும் தற்போது மூன்று ஆண்டுகள் ஆகியும் இழப்பீடுகள் வழங்கப்படாததை கண்டித்து இன்று மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து பாதிக்கப்பட்டவர்கள் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். CPI(M) மாநிலச் செயலாளர் பெ.சண்முகம் தலைமையில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் 1977 ஆம் ஆண்டு முதல் 1986 ஆம் ஆண்டு வரை விவசாயிகளிடம் இருந்து கையகப்படுத்தப்பட்டுள்ள நிலத்திற்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோஷங்களை எழுப்பி தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.