தமிழ்நாட்டில் மீன்பிடித் தடைக்காலம் இம்மாதம் 14-ஆம் தேதியுடன் முடிவடைய உள்ள நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் மீனவர்கள் மீண்டும் கடலுக்கு மீன்பிடிக்கச் செல்ல தயாராகி வருகின்றனர். இந்நிலையில், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள 28 கடலோர மீனவ கிராமங்களில் உள்ள 2400 பதிவுசெய்யப்பட்ட படகுகள் மற்றும் 650 பதிவுசெய்யப்படாத படகுகள் என மொத்தம் 3050 நாட்டுப்படகுகளை மீன்வளத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்த ஆய்வு குறித்து ஏற்கெனவே மீன்வர்களுக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டிருந்த மீனவர்கள் தங்கள் படகுகளை மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறையின் வாயிலாக தெரிவிக்கப்பட்ட வர்ணம் பூசி ஆய்வுக்கு தயாராக வைத்திருந்தனர். மீன்வளம் மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குநர்
மோகன்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், படகு உரிமையாளர்களின் பதிவுச்சான்று, மீன்பிடி உரிமம், வரிவிலக்கு அளிக்கப்பட்ட டீசல் எரியெண்ணெய் அட்டை, துறை மூலம் வழங்கப்பட்ட தொலைதொடர்பு கருவிகள் ஆகியவைகளை அதிகாரிகள் ஆய்வு செய்தனர். மேலும், விற்பனை வரி விலக்களிக்கப்பட்ட எரியெண்ணெய் வாங்கும் படகுகள் ஆய்வு செய்யப்பட்டன. மயிலாடுதுறை மாவட்டத்தில் விசைப்படகுகள் கடந்த மாதம் 30-ஆம் தேதி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது குறிப்பிடத்தக்கது.