கர்நாடக மாநிலம் பல்லாரி மாவட்டத்தை சேர்ந்தவர் பல்லவி (25). இவர் தார்வாரில் தங்கியிருந்து அரசு நடத்தும் போட்டி தேர்வுகளுக்கு 4 ஆண்டுகளாக பயிற்சி பெற்று வந்தார். அவர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ஒரு அரசு பணிக்கான தேர்வை எழுதி அதில் தேர்ச்சி பெற்று உள்ளார். விரைவில் பணி நியமன ஆணை கிடைக்கும் என்று அவர் எதிர்பார்த்து காத்து இருந்தார்.
ஆனால் அவர் எழுதிய அந்த அரசு தேர்வின் பணி நியமன ஆணை இதுவரை கிடைக்கவில்லை. இதுகுறித்து பல்லவி சம்பந்தப்பட்ட அலுவலகத்திற்கு சென்று விசாரித்தபோது. அந்த பணிக்கான ஆள்சேர்ப்பை அரசு கைவிட்டதாக தெரிவித்துள்ளனர். எனவே அந்த தேர்வில், தேர்ச்சி பெற்ற யாருக்கும் பணி நியமன ஆணை வழங்காமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது என்றும் கூறியுள்ளனர். இதனால் மனமுடைந்த பல்லவி விரக்தி அடைந்து காணப்பட்டார். இந்த நிலையில் அவர் தார்வார் அருகே சிவகிரி ரயில் நிலையத்திற்கு அருகே தண்டவாளத்தில் வேகமாக வந்த ரெயில் முன் பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.

