டூவீலரில் மூட்டையில் கஞ்சா கடத்தல்… சிறுவன் உள்பட 2 பேர் கைது
திருச்சி பாலக்கரை போலீஸ் நிலையத்திற்கு உட்பட்ட மணல் வாரி துறை சாலை பகுதி அருகே சப்-இன்ஸ்பெக்டர் ரவிச்சந்திரன் தலைமையில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அந்த வழியாக வந்த இருசக்கர வாகனத்தில் வந்தவர்களை நிறுத்தி சோதனை செய்தனர். அந்த இருசக்கர வாகனத்தில் 4 கிலோ கஞ்சா இருந்தது தெரிய வந்தது. இதைத் தொடர்ந்து போலீசார் அவர்களை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் சங்கிலியாண்டபுரம் மறைமலை அடிகள் தெருவை சேர்ந்த சௌந்தர்ராஜன் (வயது 20) மற்றும் 17 வயது சிறுவன் என தெரிய வந்தது. இதை யடுத்து போலீசார் சௌந்தரராஜனை கைது செய்து சிறையில் அடைத்தனர். மற்றும் 17 வயது சிறுவனை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் ஒப்படைத்தனர். மேலும் தலைமறைவான திருவாரூர் மாவட்டத்தை சேர்ந்த கலைச்செல்வன் என்பவரை தேடி வருகின்றனர். அவர்களிடமிருந்து 4 கிலோ கஞ்சா, ஒரு இருசக்கர வாகனம், ஒரு செல்போன் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.
புகையிலை விற்றவர் கைது
திருச்சி கருமண்டபம் பொன்னகர் பகுதியில் தமிழக அரசு தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக செசன்ஸ் கோர்ட்டு போலீசாருக்கு தகவல் வந்தது. அதன்பேரில் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போது அங்கு புகையிலை பொருட்கள் விற்றுக் கொண்டிருந்த கரூர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த தமிழ்ச்செல்வன் (வயது 28) என்பவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து புகையிலை பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மனைவி பிரிந்து சென்றதால் விரக்தி : திருமணமான 8 மாதத்தில் கார் டிரைவர் தற்கொலை
திருச்சி அரியமங்கலம் மேல அம்பிகாபுரம் இந்திராகாந்தி தெருவை சேர்ந்தவர் இளங்கோ. இவரது இளைய மகன் நந்தா (வயது 26). கார் டிரைவரான இவருக்கு கடந்த 8 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. இவரது மனைவி ரம்யா. இவர்களுக்கு இடையே குடும்ப பிரச்சினை இருந்து வந்ததாக கூறப்படுகிறது. இதனால் அவரது மனைவி தனது தாய் வீட்டிற்கு சென்று விட்டார். இதையடுத்து நந்தா தனது மனைவியை அழைக்க தனது மாமனார் வீட்டிற்கு சென்றுள்ளார். ஆனால் மனைவி உடன் வர மறுத்துள்ளார். இதனால் மனவிரக்த்தியில் இருந்த நந்தா 26- ந் தேதி இரவு தனது வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்த புகாரின்பேரில் அரியமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

