தங்க நகைகளை அடகு வைப்பதற்கு புதியதாக 9 விதிமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
வங்கிகள் மற்றும் வங்கியல்லா நிதி நிறுவனங்களும் ஒரே மாதிரியான நடவடிக்கைகளை மேற்கொள்ள இது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
அதன்படி ரிசர்வ் வங்கியின் புதிய விதிமுறைகள் வருமாறு:
தங்க நகையின் மதிப்பில் 75% தொகை மட்டுமே கடன் வழங்கப்படும்.
அடமானம் வைக்கப்படும் நகைகளுக்கு உரிய ஆவணங்களை சமர்ப்பிக்க வேண்டும்.
வங்கிகள்(அ) வங்கியல்லா நிதி நிறுவனங்கள் தங்கத்திற்கான தூய்மை சான்றிதழை வழங்க வேண்டும்.
தங்க ஆபரணங்கள் மற்றும் வங்கிகளில் வாங்கிய தங்க நாணயங்களுக்கு மட்டுமே கடன் பெற முடியும்.
வெள்ளிப் பொருட்களுக்கும் கடன் வழங்க ரிசர்வ் வங்கி அனுமதி.
ஒரு கிலோவுக்கு குறைவாக உள்ள நகைகளுக்கு மட்டுமே கடன் வழங்க அனுமதி.
அடகு வைக்கப்படும் நகைகள் 22 காரட் தங்கத்தின் விலையில் மட்டுமே மதிப்பிடப்படும்.
கடன் ஒப்பந்தத்தில் முழுமையான விவரங்கள் இருக்க வேண்டும்.
அடகு வைக்கப்பட்ட தங்கத்திற்கான முழு தொகையையும் வாடிக்கையாளர்கள் செலுத்திய 7 நாட்களுக்குள் நகைகளை திருப்பித் தரவேண்டும்.
தாமதம் ஆகும் ஒவ்வொரு நாளுக்கும் வாடிக்கையாளர்களுக்கு கடன் வழங்குபவர்கள் 5 ஆயிரம் ரூபாய் செலுத்த வேண்டும்.
ரிசர்வ் வங்கியின் இந்த விதிமுறைகளுக்கு பலரும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர். ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளை ஏற்றுக்கொள்ள முடியாது. தங்க நகைகளை அடகு வைக்க முடியாத சூழலில் லோன் ஆப்களை நம்பி பாதிக்கப்படும் அபாயம் ஏற்படும். புதிய விதிமுறைகளை திரும்பப் பெற வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.
ஆர்பிஐ வெளியிட்ட விதிகளின்படி, கடன் வாங்குபவர் அதை திருப்பி மீட்கும் தகுதி உள்ளவராக இருந்தால் மட்டுமே தங்க நகை கடன் வழங்கப்பட வேண்டும். தங்க கடனுக்கான வட்டியை ஒருவர் முழுமையாக செலுத்துகிறாரா என்பதை மாதம் மாதம் கண்காணிக்க வேண்டும். தங்க நகையை காட்டி அட்வான்ஸ் கடன் வாங்க அனுமதிக்க கூடாது. தங்கத்தின் உரிமையாளர் யார் என்பதில் சிக்கல் இருந்தால் அவர்களுக்கு நகை கடன் வழங்க கூடாது. தங்க நகைகளை ஒரு வருடம் முடிவதற்குள் கண்டிப்பாக திருப்ப வேண்டும். 1 கிலோவிற்கு மேல் ஒரே நேரத்தில் தங்கத்தை அடகு வைக்க அனுமதிக்க கூடாது என்று ஆர்பிஐ வெளியிட்ட புதிய விதிகள் தெரிவித்துள்ளன.
இந்த விதிகளின்படி தங்களுக்கும் சிரமம் ஏற்பட்டுள்ளது என வங்கியாளர்கள் கூறுகிறார்கள்.
