தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் 2 நாள் பயணமாக நேற்று மாலை தஞ்சை வந்தார். இதற்காக திருச்சி வந்த முதல்வா் ஸ்டாலினுக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கிருந்து தஞ்சை செல்லும் வழியில் மாலை 6.05 மணிக்கு கல்லணையில் சென்ற முதல்வர், கல்லணையில் இருந்து காவிரி, கொள்ளிடம் ஆறுகளில் குறுவை பாசனத்துக்கு தண்ணீர் திறந்து வைத்தார். விவசாயம் செழிக்க வேண்டி ஆற்றில் பூக்கள், நவதானியங்களை தூவினார்.
இதையொட்டி, கல்லணையில் உள்ள காவிரி, வெண்ணாறு, கல்லணை கால்வாய், கொள்ளிடம் ஆகிய ஆறுகளில் உள்ள ஷட்டர்கள் சீரமைக்கப்பட்டு புதிய வண்ணம் பூசப்பட்டிருந்தது. கரிகால சோழன், ராஜராஜசோழன், அகத்தியர், காவிரி தாய், சர் ஆர்தர் காட்டன் சிலைகளுக்கும் வண்ணம் பூசப்பட்டிருந்தது.
முன்னதாக, டெல்டா பகுதிகளில் நீர்நிலைகள் தூர் வாரப்பட்டது, சாகுபடி விவரங்கள் குறித்து அமைச்சர்கள், மக்கள் பிரதிநிதிகள், ஆட்சியர்களிடம் முதல்வர் கேட்டறிந்தார். ‘‘மேட்டூர் அணையின் நீர் இருப்பு, நீர்வரத்து, மழை, கர்நாடக அணைகளில் இருந்து கிடைக்க வேண்டிய நீரின் அளவு ஆகியவற்றை கருத்தில் கொண்டு, காவிரி டெல்டா பாசன பகுதிகளுக்கு தேவைக்கேற்ப தண்ணீரை பகிர்ந்தளிக்க வேண்டும். பாசனத்துக்கு வழங்கப்படும் நீரை சிக்கனமாகவும், தேவைக்கேற்பவும் பயன்படுத்தி அதிக மகசூல் பெற நடவடிக்கை எடுக்க வேண்டும். உரங்கள், விதைகள், பூச்சிக்கொல்லி மருந்துகள் தேவையான அளவு இருப்பதை உறுதி செய்ய வேண்டும்’’ என அறிவுறுத்தினார்.
காவிரி டெல்டா மாவட்ட பாசனத்துக்காக கடந்த 1998 ஜூன் 23-ம் தேதி அப்போதைய முதல்வர் கருணாநிதி கல்லணையை திறந்து வைத்தார். அதன்பிறகு, கல்லணையில் அமைச்சர்கள் மட்டுமே தண்ணீர் திறந்து வந்தனர். 26 ஆண்டுகளுக்கு பிறகு கல்லணையில் முதல்வர் ஸ்டாலின் தண்ணீர் திறந்து வைத்துள்ளார். மேட்டூர் அணை, கல்லணையை ஒரே ஆண்டில் திறந்துவைத்த முதல்வர் ஸ்டாலின் மட்டுமே என்பதும் குறிப்பிடத்தக்கது.
இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் கே.என்.நேரு, ரகுபதி, எஸ்.எஸ்.சிவசங்கர், கோவி.செழியன், அன்பில் மகேஸ், மெய்யநாதன், எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, எஸ்.கல்யாணசுந்தரம், எஸ்.முரசொலி, ஆர்.சுதா, டெல்லி சிறப்பு பிரதிநிதி ஏகேஎஸ்.விஜயன், முன்னாள் மத்திய அமைச்சர் பழநிமாணிக்கம் மற்றும் துரை.சந்திரசேகரன், டிகேஜி.நீலமேகம், சாக்கோட்டை எஸ்.அன்பழகன் உள்ளிட்ட எம்எல்ஏக்கள், நீர்வளத் துறை அரசு செயலர் ஜெ.ஜெயகாந்தன், மாவட்ட கலெக்டர்கள் பிரியங்கா பங்கஜம் (தஞ்சாவூர்), பிரதீப்குமார் (திருச்சி), மோகனசந்திரன் (திருவாரூர்), ஸ்ரீகாந்த் (மயிலாடுதுறை), ஆகாஷ் (நாகை), மு.அருணா (புதுக்கோட்டை) ஆகியோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக டெல்மா மாவட்ட கலெக்டர்களுடன் முதல்வர் ஸ்டாலின் ஆய்வு நடத்தினார். பாசனத்திற்கு தேவையான தண்ணீரை சிக்கனமாக பயன்படுத்த வேண்டும், குறுவை சாகுபடிக்கான இடுபொருட்கள் தேவையான அளவு இருக்கிறதா என்பது குறித்தும் முதல்வர் கேட்டறிந்தார். இந்த ஆய்வு கல்லணையில் உள்ள விருந்தினர் விடுதியில் நடந்தது.
அதைத்தொடர்ந்து முதல்வர், தஞ்சையில், முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சிலையை திறந்து வைத்தார். பின்னர் முதல்வர் மருந்தகத்தை ஆய்வு செய்தார். பின்னர் தஞ்சையில் முக்கிய வீதிகளில் ரோடு ஷோ நடத்தி மக்களை சந்தித்தார். அப்போது அவர் கோரிக்கை மனுக்களை பெற்றார். ஏராளமான மக்கள் முதல்வருடன் செல்பி எடுத்துக்கொண்டனர். பலர் மனுக்கள் கொடுத்தனர். அவற்றையும் அவர் பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.
கல்லணையில் நேற்று முதல்வர் திறந்து விட்ட தண்ணீர் இன்று காவிரியில் திருக்காட்டுப்பள்ளி வந்தது. அங்கு காவிரி நீரை பொதுமக்கள் வரவேற்று மலர்களை தூவினர்.