குஜராத் மாநிலம் அகமதாபாத் அருகே உள்ள குஜ்செல் என்ற இடத்தில் உள்ள விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட பயணிகள் விமானம் தரையில் விழுந்து விபத்துக்குள்ளானது. மெகானி என்ற இடத்தில் விமானம் விழுந்துள்ளது. அந்த விமானத்தில் 242 பேர் இருந்தனர். இவர்களில் 12 பேர் விமான பணியாளர்கள். லண்டன் அருகே உள்ள கேட்விக் என்ற இடத்துக்கு புறப்பட்டபோது இந்த விமானம் விபத்துக்குள்ளானது. இதில் வெளிநாட்டினர் பலர் இருந்தனர். இது ஏர் இந்தியாவுக்கு சொந்தமான விமானம்.
மதியம் 1.45மணி அளவில் இந்த விபத்து ஏற்பட்டது. அகமதாபாத் விமான நிலையத்தில் இருந்து புறப்பட்ட சில நிமிடங்களில் இந்த விபத்து ஏற்பட்டது. விமானம் விழுந்த இடத்தில் விண்ணைமுட்டும் அளவுக்கு கரும்புகை ஏற்பட்டது. அந்த இடத்தில் இருந்து யாரும் வெளியே தப்பி வந்தது போல தெரியவில்லை. மீட்பு பணிகள் வேகமாக நடக்கிறது. தீயணைப்பு படையினர் தீவிரமாக பணியில் ஈடுபட்டு உள்ளனர்.
விபத்துக்குள்ளான விமானம் போயிங் 787 ரகத்தை சேர்ந்தது. விபத்து குறித்து அறிந்த பிரதமர் மோடி, மற்றும் மத்திய அமைச்சர்கள் குஜராத் முதல்வரை தொடர்பு கொண்டு விசாரித்தனர்.
கடைசியாக கிடைத்த தகவல்படி விமானத்தின் என்ஜின் செயலிழந்ததால் விபத்து ஏற்பட்டதாகவும், விமானம் புறப்பட்ட 10வது நிமிடத்தில் விபத்து ஏற்பட்டதாகவும் தெரியவந்துள்ளது. பேரிடர் மீட்பு படையினர் அங்கு விரைந்தனர். விபத்தில் பெரும்பாலானவர்கள் இறந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. வினத்து நடந்த இடத்திற்கு மத்திய விமான போக்குவரத்து துறை அமைச்சர் ராம் மோகன் நாயுடு விரைந்துள்ளார்.
