Skip to content

அரியலூர் வந்த ஹாக்கி உலகக்கோப்பை … உற்சாக வரவேற்பு

  • by Authour

அரியலூர் மாவட்ட விளையாட்டு அரங்கில், 14வது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக்கோப்பை விளையாட்டு போட்டிக்கான வெற்றிக்கோப்பை சுற்றுப்பயணம் அரியலூர் மாவட்டத்திற்கு வந்தடைந்ததையொட்டி மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வரவேற்று, வீரர், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்களுக்கு காட்சிப்படுத்தினார். இந்நிகழ்வில் ஜெயங்கொண்டம் சட்டமன்ற உறுப்பினர் க.சொ.க.கண்ணன் கலந்துகொண்டார்.

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் ஹாக்கி இந்தியா இணைந்து நடத்தும் 14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டிகள் தமிழ்நாட்டில் 28.11.2025 முதல் 10.12.2025 வரை சென்னை மற்றும் மதுரை மாவட்டங்களில் நடைபெற உள்ளது. இப்போட்டிகள் குறித்து தமிழ்நாட்டில் உள்ள மாணவ/மாணவியர்கள், விளையாட்டு வீரர்/வீராங்கனைகள், இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வண்ணம்

தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள் கடந்த 10.11.2025 அன்று சென்னை மேயர் இராதாகிருஷ்ணன் ஹாக்கி விளையாட்டு அரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் 14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை சின்னமான காங்கேயனை அறிமுகப்படுத்தி, வெற்றிக்கோப்பையின் தமிழ்நாடு முழுவதற்குமான சுற்றுப்பயணத்தை கொடியசைத்து தொடங்கி வைத்தார். அதனைத்தொடர்ந்து இன்றையதினம் அரியலூர் மாவட்டம், அரியலூர் விளையாட்டு

அரங்கத்திற்கு வந்தடைந்த 14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை வெற்றிக்கோப்பையினை மாவட்ட ஆட்சித்தலைவர் பொ.இரத்தினசாமி வரவேற்று, வீரர், வீராங்கனைகள் மற்றும் பொதுமக்கள் அறிந்து கொள்ளும் வகையில் காட்சிப்படுத்தினார்.

முன்னதாக 14-ஆவது ஆடவர் ஹாக்கி இளையோர் உலகக் கோப்பை போட்டிக்கான வெற்றிக்கோப்பை அரியலூர் நகராட்சி பேருந்து நிலையம், அண்ணாசிலை, செந்துறை சாலை வழியாக பொதுமக்கள் பார்வையிடும் வகையில் மாவட்ட விளையாட்டு அரங்கிற்கு எடுத்துவரப்பட்டது.

இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் முனைவர்.ஆ.ரா.சிவராமன், அரியலூர் நகர்மன்ற தலைவர் சாந்தி கலைவாணன், மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் லெனின், அரியலூர் ஹாக்கி சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், இதர அரசு அலுவலர்கள், வீரர் வீராங்கனைகள், பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

error: Content is protected !!