Skip to content

தவெக தலைமையில் கூட்டணி அமைந்தால் NDAக்கு 3வது இடம் தான் – டிடிவி

2026 சட்டமன்றத் தேர்தலுக்கான அரசியல் சூழலை மாற்றும் வகையில், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம் (அமமுக) பொதுச் செயலாளர் டி.டி.வி. தினகரன், “தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தலைவர் விஜய் தலைமையில் பலமான கூட்டணி அமைந்தால், அது தேசிய ஜனநாயகக் கூட்டணியை (NDA) 3-வது இடத்திற்கு தள்ளும் வாய்ப்பு உள்ளது” என்று தெரிவித்தார். இதை “எடப்பாடி கே.பழனிசாமி மீது வருத்தத்தில் சொல்லவில்லை, யதார்த்தத்தை சொல்கிறேன்” என்று தெளிவுபடுத்தினார்.

திருப்பூர் தெற்குத் தொகுதி நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பேசிய அவர், இந்தக் கருத்தை தெரிவித்தார். திருப்பூர் மாநகர் மாவட்ட அமமுக சார்பில் கல்லூரி சாலையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்ற இக்கூட்டத்தில், தினகரன் திமுக ஆட்சியின் மீது கடுமையான விமர்சனம் வச்சினார். “ஓய்வூதியர் திட்டம், வேலைவாய்ப்பு, மாற்றுத்திறனாளிகள் உள்ளிட்ட 90% வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை. சட்டம்-ஒழுங்கு சீர்குலைந்து, போதைப்பழக்கம், கொலை, கொள்ளை அதிகரித்துள்ளது. இருந்தபோதிலும் திமுக பாராளுமன்றத் தேர்தலில் 39 தொகுதிகளில் வென்றது அவர்களை உற்சாகப்படுத்துகிறது. இந்திய கூட்டணியில் சில கட்சிகள் பிளவுபட்டுள்ளன. தவெக வருகை போன்றவற்றை ஆலோசித்து, திமுகவை வீழ்த்த நினைக்கும் கட்சிகள் சுயபரிசோதனை செய்ய வேண்டும்” என்று அவர் கூறினார்.

தினகரன் தொடர்ந்து, “மிருகப் பலத்துடன் இருக்கும் திமுகவை வீழ்த்த, எதிர்க்கட்சிகள் தங்களை சரிசெய்ய வேண்டும். தவெக தலைமையில் நல்ல கூட்டணி அமைந்தால் திமுகவுக்கு போட்டியாக அமையும். நான்கரை ஆண்டுகளில் வேலைவாய்ப்பு கொடுத்தோம் என்று வெற்று விளம்பரம் செய்கிறார்கள், ஆனால் தமிழக மக்களுக்கு எந்தப் பயனும் இல்லை. ஊழல், முறைகேடுகள் நிறைந்த ஆட்சி” என்று விமர்சித்தார். அதிமுக உரிமை வழக்கு குறித்த கேள்விக்கு, “உச்சநீதிமன்ற விசாரணைக்குப் பிறகு பேசலாம்” என்று பதிலளித்தார்.

தினகரன், “அதிமுகவில் சிலரின் சுயநலத்தால் விழுதுகளான தொண்டர்கள் நீக்கப்பட்டுள்ளனர். 99% தொண்டர்கள் மன வருத்தத்தில் உள்ளனர். சரியான முடிவு எடுக்காவிட்டால் தேர்தல் பாடம் தரும். செங்கோட்டையன் நட்பாக இருந்தாலும், அவர் தவெகவில் இணைந்தது அவரது விருப்பம். விஜய் வளர்ந்து வரும் கட்சியாகத் தெரிகிறது. விஜயகாந்த் வருகை போல விஜய் வருகை தாக்கத்தை ஏற்படுத்தும். அவர் பெண்கள், இளைஞர்கள் ஆதரவைப் பெற்றவர்” என்று பாராட்டினார். அமமுக முதலில் தன்னைப் பலப்படுத்தி, “தவிர்க்க முடியாத சக்தியாக” வளரும் என்றும் தெரிவித்தார்.

error: Content is protected !!