உளுந்தூர்பேட்டை கூடுதல் முன்சீப் நீதிமன்றத்தில் இளநிலை உதவியாளராக பணியாற்றி வருபவர் ரஞ்சிதா. இவர் 3வது பிரசவத்திற்கான ஓராண்டு மகப்பேறு விடுப்பும், சலுகைகளும் கோரி விண்ணப்பித்து இருந்தார். ஆனால் 3-வது பிரவசத்துக்கு சலுகைகள் வழங்க முடியாது என தெரிவித்து, ரஞ்சிதாவின் கோரிக்கையை நீதிபதி நிராகரித்துள்ளார்.
இதனை எதிர்த்து ரஞ்சிதா சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தாக்கல் செய்தார். இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.சுரேஷ்குமார் மற்றும் ஹேமந்த் சந்தன்கவுடர் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, பணிக்கு சேரும் முன்பே இரண்டு குழந்தைகளை பெற்ற நிலையில், மூன்றாவது முறையாக கருவுற்று பணிக்கு சேர்ந்த பெண்ணுக்கு மகப்பேறு விடுப்பு வழங்கும்படி சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்த உத்தரவைச் சுட்டிக்காட்டி, ரஞ்சிதாவுக்கு சட்டப்படி மகப்பேறு விடுப்பு வழங்க, உளுந்தூர்பேட்டை முன்சீப் நீதிமன்ற நீதிபதிக்கு சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டது.
மேலும் அந்த உத்தரவில், குழந்தை பிறப்புக்கு முன்பும், பின்பும் வலிகளை அனுபவிக்கும் தாய்க்கு ஆதரவாகவே மகப்பேறு விடுப்பு வழங்க கொள்கை முடிவெடுக்கப்பட்டுள்ள நிலையில், மூன்றாவது பிரசவத்துக்கு விடுப்பு மறுப்பது நியாயமற்றது. மூன்றாவது பிரசவத்துக்கு மகப்பேறு விடுப்பு வழங்க மறுக்க முடியாது என நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.