கரூர் மாவட்டம் மாயனூரில் ரயில்வே கேட் செயல்பாட்டில் இருந்து வருகிறது. கரூர் – திருச்சி இடையேயான ரயில் பாதையில் உள்ள இந்த ரயில்வே கேட்டின் வழியாக தான் மாயனூர் கதவணை, திருச்சி மாவட்டம் சீப்லாப்புதூர் செல்லும் சாலை உள்ளது. நாள் ஒன்றுக்கு 20க்கும் மேற்பட்ட முறை இந்த கேட் திறந்து மூடப்படுவது வழக்கம். இன்று காலை 6.40 மணியளவில் ரயில் வருவதற்காக இந்த கேட் வழக்கமாக மூடப்பட்டது. ரயில் சென்ற பிறகு ரயில்வே கேட்டில் பழுது ஏற்பட்டதால் அவற்றை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது. காலை நேரத்தில் வேலைக்கு செல்பவர்கள், பள்ளி கல்லூரி, அலுவலகம் செல்பவர்கள் கடும் அவதிக்குள்ளாகினர். இதனால் பொறுமை இழந்த அவர்கள் மூடப்பட்ட கேட்டை பாதியளவு தூக்கி விட்டு பொதுமக்கள்
கடந்து சென்றனர். ஆபத்தை உணராமல் கார் உள்ளிட்ட வாகனங்களும் ரயில் பாதையை கடந்தும், ரயில் பாதையில் நிறுத்தியும், கடந்து செல்ல முடியாமல் திரும்பியும் செல்லும் நிலை ஏற்பட்டது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இப்பிரச்சினை ஏற்பட்டதால் கரூர் – திருச்சி தேசிய நெடுஞ்சாலை ஓரத்தில் ரயில்வே கேட்டை கடந்து செல்லும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. ரயில்வே ஊழியர்கள் கேட்டின் பழுதை சரி செய்தனர். இதனால் போக்குவரத்து சுமார் 1 மணி நேரத்திற்கு பிறகு சீரானது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. இப்பிரச்சினைக்கு ஒரு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தர வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.