சிவனுக்கு தொண்டு செய்கிறவர்களுக்கு தீங்கு ஏற்பட்டால் சிவனடியார்கள் சினம் கொள்வார்கள் என்னும் வரலாற்று ஆன்மீக உண்மை சம்பவத்தை மையப்படுத்தி செயல் விளக்கத்துடன் கரூரில் பூக்குடலை திருவிழா நடைபெற்றது.
கரூரில் பிரசித்தி பெற்ற ஸ்ரீ கல்யாண பசுபதீஸ்வரர் வளாகத்தில் இலைமலிந்த வேல்நம்பி எறிபத்த நாயனார் விழாவின் பூக்குடலை
திருவிழா இன்று நடைபெற்றது.
64 நாயன்மார்களில் ஒருவரான எறிபத்த நாயனார் இறைவன் ஈசனுக்கு சாட்டுவதற்கு நந்தவனத்தில் பூக்களை பறித்து வரும் போது புகழ் சோழனின் பட்டத்து யானை மதம் பிடித்தவாறு வந்து எறிபத்த நாயனாரின் கையில் பூக்குடலையில் வைத்திருந்த பூக்களை தட்டிவிட்டது. இதனால் கோபமடைந்த எறிபத்த நாயனார் மழு எனப்படும் கோடாலியால் யானையின் தும்பிக்கையை துண்டித்தார்.
இதனை அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மன்னன் புகழ் சோழன் இறைவனுக்கு பறித்த பூக்களை தட்டிவிட்டதால் தானே அதற்கு முழு பொறுப்பு எனக் கூறி தனது உடைவாலை உருவி தனது தலையை துண்டிக்க கூறினார். இதனை அறிந்து அங்கு தோன்றிய இறைவன் எறிபத்த நாயனாரின் பக்தியையும், மன்னனின் எண்ண ஓட்டங்களையும் அறியவே இத்திருவிளையாடலை நடத்தியதாக கூறி யானையை உயிர்ப்பித்தார்.
இந்த வரலாற்று பின்னனி கொண்ட ஆன்மீக செயல் விளக்கத்தை தத்ரூபமாக சிவனடியார்கள் நடித்து காட்டிய இத்திருவிழாவில் ஆண்கள், பெண்கள், குழந்தைகள் மற்றும் பக்தர்கள் என ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு இறைவனின் திருவிளையாடலை பக்தி பரவசத்துடன் கண்டுகளித்தனர்.
நிகழ்ச்சியின் நிறைவாக சிவபக்தர்கள் பூக்குடலையில் கொண்டு வந்த பூக்களுடன் கரூர் நகரின் முக்கிய வீதிகள் வழியாக ஊர்வலமாக சென்று இறுதியில் பசுபதீஸ்வரர் ஆலயத்தை வந்தடைந்தனர்.